கொரோனா.. அனைத்து கட்சி எம்பிக்கள் குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை.. முக்கிய முடிவு?
டெல்லி: கொரோனா குறித்து பிரதமர் மோடி இன்று அனைத்து கட்சிகளின் நாடாளுமன்ற அவைக்குழு தலைவர்களுடன் ஆலோசனை செய்தார்.
Recommended Video
இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிறது.கொரோனா காரணமாக இந்தியாவில் இதுவரை 124 பேர் பலியாகி உள்ளனர். இந்தியா முழுக்க 4789 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்தியாவில் அதிகமாக மகாராஷ்டிராவில் மிக மோசமாக 1018 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் 68 பேர் பலியாகி உள்ளனர். அதற்கு அடுத்து தமிழகத்தில் 690 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக மொத்தம் நாடு முழுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 21 நாட்கள் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு 24ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு பிறகு தொடங்கியது.
ஏப்ரல் 14ம் தேதி வரை இந்த ஊரடங்கு நடக்க உள்ளது. ஆனாலும் கொரோனா இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. கடந்த 4 நாட்களில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளது.
இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று அனைத்து கட்சிகளின் நாடாளுமன்ற அவைக்குழு தலைவர்களுடன் ஆலோசனை செய்தார். 5 எம்பிக்களுக்கும் அதிகமாக இருக்கும் கட்சிகளின் நாடாளுமன்ற குழு தலைவர்களுடன் ஆலோசனை செய்தார். வீடியோ கான்பிரன்ஸ் மூலம் இந்த ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது.
கொரோனா குறித்த மாநில அரசுகளின் நடவடிக்கை என்ன, என்ன முயற்சிகளை எடுக்கலாம் என்று பிரதமர் மோடி ஆலோசனை செய்துள்ளார். அதேபோல் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும் இதில் ஆலோசனை செய்தனர். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த எம்பிகளின் தொகுதி மேம்பாட்டு நிதியை இரண்டு வருடத்திற்கு மத்திய அரசு நிறுத்தி உள்ளது. இது தொடர்பாகவும் இன்று ஆலோசனை செய்யப்பட்டது.
இந்த ஆலோசனையில் காங்கிரஸ் சார்பாக குலாம் நபி அசாத், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சுதீப், சிவசேனாவின் சஞ்சய் ராவத், பிஜேடியின் பினாகி மிஸ்ரா, திமுக சார்பாக டி ஆர் பாலு, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார், சமாஜ்வாதியின் ராம் கோபால் என்று பல கட்சியை சேர்ந்த எம்பிக்கள் கலந்து கொண்டனர். அதிமுகவிற்கு ஒரே ஒரு எம்பிதான் இருப்பதால், அக்கட்சியில் இருந்தும் யாரும் கலந்து கொள்ளவில்லை.