கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்- இறப்புகளை குறைக்க வேண்டும்: முதல்வர்களுக்கு மோடி அப்பீல்
டெல்லி: மாநிலங்களில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்; இறப்பு விகிதத்தை குறைக்க வேண்டும் என்று முதல்வர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்
இந்தியாவில் கொரோனா பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் இருந்தாலும் சில மாநிலங்களில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இந்தியாவில் தற்போதைய நிலையில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91,77,753. மொத்த கொரோனா மரணங்கள் 1,34,254. ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 4,37,782.
இதனிடையே கொரோனா தடுப்பு மருந்துகள் முயற்சிகள் முன்னேற்றத்தை எட்டியுள்ளன. பல்வேறு தடுப்பு மருந்துகள் சிறப்பாக செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை பெரும் எண்ணிக்கையில் வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருக்கிறது.
முதல்வர்களுடன் மோடி ஆலோசனை
இந்நிலையில் தமிழ்நாடு உட்பட 8 மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் மாநிலங்களில் கொரோனா பரவல், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் கொரோனா தடுப்பு மருந்து விநியோகம் தொடர்பாகவும் முதல்வர்களுடன் பிரதமர் மொடி விவாதித்தார்.
கொரோனா கட்டுப்பாட்டில் நல்ல நிலை
இக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, அனைவரது ஒருங்கிணைந்த கூட்டு முயற்சியால் பிற நாடுகளை ஒப்பிடுகையில் கொரோனாவை நாம் சிறப்பாகவே கட்டுப்படுத்தி இருக்கிறோம். கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைதல் அதிகரித்தும் மற்றும் கொரோனாவால் மரணமடைதல் எண்ணிக்கை கணிசமாக குறைந்தும் உள்ளது.
கொரோனா தடுப்பு மருந்து
எந்த ஒரு கொரோனா தடுப்பு மருந்து நமக்கு கிடைத்தாலும் பாதுகாப்புதான் மிக முக்கியமானது. உரிய பாதுகாப்புடன் நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும். கொரோனா தடுப்பு மருந்து விநியோகம் தொடர்பாக மாநிலங்களுடன் இணைந்து மத்திய அரசு செயல்படும். கொரோனா தடுப்பு மருந்துகளை பாதுகாப்பாக சேமித்து வைக்கும் கட்டமைப்புகளை மாநில அரசுகள் உருவாக்க வேண்டும்.
சில கேள்விகளுக்கு பதில் இல்லை
எத்தனை கொரோனா தடுப்பூசிகள் நமக்கு கிடைக்கும் என்பதை உறுதியாக சொல்ல முடியவில்லை. அதேபோல் கொரோனா தடுப்பு மருந்தின் விலையும் நிர்ணயிக்கப்படவில்லை. இது தொடர்பான கேள்விகளுக்க் இதுவரை பதில்களும் இல்லை. கொரோனா தடுப்பு மருந்து நடவடிக்கைகளை உன்னிப்பாக தொடர்ந்து இந்தியா கவனித்து வருகிறது. கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பாளர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறோம். இதேபோல் பிற நாடுகளுடனுடம் தொடர்பில் உள்ளோம்.
பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்
மாநிலங்கள் கொரோனா பரிசோதனைகளை மேலும் அதிகரிக்க வேண்டும். கொரோனா இறப்புகள் விகிதத்தை குறைக்க வேண்டும். மாநிலங்களில் கொரோனா தடுப்பு மருந்து விநியோகத்துக்கான ஏற்பாடுகளளை அரசுகள் செய்து தயாராக இருக்க வேண்டும் என்றார்.