கொரோனாவால் பலியானவர்கள் உடலுக்கு அவமரியாதை.. தாமாக முன்வந்து வழக்கு பதிந்த உச்ச நீதிமன்றம்!
டெல்லி: கொரோனா காரணமாக பலியான நபர்களின் உடல்களை முறையாக பாதுகாக்க வேண்டும் மற்றும் அடக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிந்துள்ளது.
இந்தியாவில் மொத்தம் 297787 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இந்தியா யுகேவை முந்தியுள்ளது.இன்று இந்தியாவில் கொரோனா காரணமாக 370 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் மொத்தமாக 8477 பேர் பலியாகி உள்ளனர்.
கொரோனா காரணமாக நாடு முழுக்க இப்படி பலர் பலியாகி வரும் நிலையில், கொரோனா காரணமாக பலியான சிலரின் உடலை சரியாக புதைக்காதது பெரிய சர்ச்சையாகி உள்ளது. பெரிய குழி தோண்டி அதில் உடலை வீசுவது, முறையாக இறுதி சடங்கு செய்யாதது, மருத்துவமனையிலேயே மூட்டை மூட்டையாக உடலை வைத்து இருப்பது என்று நிறைய புகார்கள் வந்த வண்ணம் இருக்கிறது.
இது தொடர்பாக நிறைய வீடியோக்கள் கூட வெளியானது. இந்த நிலையில் கொரோனா காரணமாக பலியான நபர்களின் உடல்களை முறையாக பாதுகாக்க வேண்டும், ஒழுங்காக அவர்கள் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
யூகேவில் புகலிடம்.. விஜய் மல்லையாவின் கோரிக்கையை ஏற்க கூடாது.. மத்திய அரசு அதிரடி கோரிக்கை!
இந்த பிரச்சனையை தற்போது தாமாக முன்வந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. கொரோனாவால் பலியானவர்களின் உடலுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரிக்க உள்ளது.
இந்த வழக்கு நாளை காலை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷன் , சஞ்சய் கிஷான் கவுல், எம்ஆர் ஷா ஆகியோர் இந்த வழக்கை விசாரிக்க இருக்கிறார்கள்.