இந்தியாவில் ஒரே நாளில் 22,771 பேருக்கு கொரோனா தொற்று.. இறப்பு 24 மணி நேரத்தில் 442 ஆக உயர்வு!
டெல்லி: இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரு நாள் எண்ணிக்கை புதிய உச்சமாக 22,771 ஆக அதிகரித்துள்ளது. உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்திற்கு போயுள்ளது.
இந்தியாவில் ஒரு நாள் கொரோனா தொற்று எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவிற்கு 22 ஆயிரமாக உயர்ந்துள்ளது. பொது முடக்கம் அறிவிக்கப்பட்டும், குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் இதுவரைக்கும் கொரோனா தொற்று எண்ணிக்கை 6.48 லட்சத்தை தொட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இதுவரைக்கும் இல்லாத அளவில் ஒரு நாள் தொற்று எண்ணிக்கை 22,771 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் உயிரிழப்பும் 442 ஆக அதிகரித்துள்ளது. பாசிடிவ் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை மற்றும் ஆக்டிவ் கொரோனா நோயாளிகள் உள்பட மொத்த எண்ணிக்கை 6,48,315 ஆக உள்ளது. இவர்களில் 3,94,227 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 18,655 ஆக உள்ளது.
கொரோனா கெடுபிடி தளர்வு: ஜூலை 6 முதல் அனைத்து நீதிபதிகளும் வழக்குகளை விசாரிப்பார்கள்- சென்னை ஹைகோர்ட்
இதுதான் சமூகப் பரவலா
தமிழ்நாடு, டெல்லி ஆகிய இடங்களில் கொரோனா பரிசோதனை அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தொற்று எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், இறப்பும் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் சில மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வந்தாலும், இன்னும் சமூகப் பரவலுக்குள் இந்தியா செல்லவில்லை என்று மத்திய, மாநில அரசுகள் கூறி வருகின்றன. ஆனால், சில மருத்துவர்கள் இந்தியா சமூக பரவலில் இருக்கிறது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
தொற்று எண்ணிக்கை
உலகளவில் இன்றைய கொரோனா தொற்று எண்ணிக்கை 11 மில்லியனாக அதிகரித்துள்ளது. அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் முதல் நான்கு இடங்களில் இருக்கின்றன. இந்த நாடுகளிலும் சேர்த்து கொரோனா தொற்று விகிதம் 51% ஆக இருக்கிறது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது (1,02721). இதுவரை தமிழகத்தில் 1,385 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்து உள்ளனர்.
டெல்லி நிலவரம்
டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடையும் சதவீதம் நாளுக்கு நாள் அதிகரித்து 69.3% ஆக உள்ளது. புதிய தொற்று எண்ணிக்கையும் 2617ல் இருந்து 2520 ஆக குறைந்துள்ளது. டெல்லியில் இதுவரைக்கும் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2923 ஆக உள்ளது. டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா தெரபி அளிக்க பிளாஸ்மா வங்கியும் துவங்கப்பட்டுள்ளது. டெல்லியில் பிளாஸ்மா சிகிச்சை நல்ல பலனை அளித்துள்ளது. சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு பிளாஸ்மா தெரபி அளிக்கப்பட்டது. தற்போது அவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா
இந்தியாவிலேயே மகாராஷ்டிராவுக்கு அடுத்து தமிழகத்தில்தான் அதிகளவில் கொரோனா தொற்று உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரைக்கும் 1.9 லட்சம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 1,02,721 பேர் இதுவரைக்கும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மே 15ஆம் தேதி வரைக்கும் தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 10,000ஆக இருந்தது. இதையடுத்து அடுத்த ஒரு மாதத்தில் இந்த எண்ணிக்கை 40,000 ஆக அதிகரித்து, ஜூன் 17ஆம் தேதி மொத்தம் 50,000 என்று இருந்தது. இது தற்போது கடந்த 16 நாட்களில் 1,02,721 ஆக அதிகரித்துள்ளது.