டெல்லியில் கொரோனா நாளுக்கு நாள் கிடுகிடு.. கெஜ்ரிவால் உடன் அமித் ஷா முக்கிய ஆலோசனை
டெல்லி: நாட்டின் தலைநகரான டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கடுமையாக அதிகரித்துள்ளது. டெல்லியில் கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா முக்கிய ஆலோசனை நடத்தினார்.
அப்போது கெஜ்ரிவாலிடம், தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து தரும் என்று அமித் ஷா உறுதி அளித்தார். இந்த தகவலை டுவிட்டரில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பதிவிட்டுள்ளார்.
சுமார் 2மாத ஊரடங்கிற்கு பிறகு பல்வேற கட்டுப்பாடுகள் டெல்லியில் தளர்த்தப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்துள்ளது. உயிரிழப்பும் அதிகமாகவே உள்ளது.
டெல்லியில் சுமார் 32800 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 305 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே ஜூலை இறுதிக்குள் டெல்லியில் 5.50 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படலாம் என டெல்லி அரசு அச்சம் தெரிவித்தது.
இந்த சூழலில் தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அழைத்து ஆலோசனை நடத்தினார். அப்போது அவரிடம் அனைத்து உதவிகளும் மத்திய அரசு அளிக்கும் என்று அமித் ஷா உறுதி அளித்தார்.
அதிகரித்த வீரியம்.. கொரோனா வைரஸ் உருமாற்றம் பெற்றுள்ளதா? சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் விளக்கம்
நாட்டின் தலைநகரான டெல்லி (32,810) , மகாராஷ்ரா (94,041), தமிழகம் (36,841), குஜராத் (21,554) ஆகிய நான்கு மாநிலங்களில் மட்டும் 185246 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்தியாவில் 2,86,931 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கில் மூன்று பங்கு கொரானா நோயாளிகள் நான்கு மாநிலங்களில் தான் உள்ளார்கள். இந்தியாவில் 8110 பேர் இதுவரை கொரோனாவால் இறந்த நிலையில் அதில் 6095 பேர் டெல்லி, மும்பை, மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். எனினும் தமிழகத்தில் மொத்த பாதிப்பில் ஒரு சதவீதத்திற்கும் மிக குறைவான நபர்களே இதுவரை கொரோனாவால் இறந்துள்ளனர்.