இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியது- தமிழகம் 2-வது இடம்
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியுள்ளதாக covid19india.org புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் கொரோனாவால் மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,155 ஆகவும் உயர்ந்துள்ளது.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் புள்ளி விவரப்படி இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 96,169 ஆகும். மேலும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3029 ஆகவும் அதிகரித்திருக்கிறது.
தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் இன்றைய பாதிப்பு நிலவரம் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அப்டேட்டில் இடம்பெறவில்லை. அதேநேரத்தில் அப்டேட் செய்யப்பட்ட covid19india.org புள்ளி விவரங்களின் அடிப்படையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியுள்ளது.
ஆம்பன் சூப்பர் புயல்- ஒடிஷாவின் சபாஷ் நடவடிக்கை- 12 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்
35 ஆயிரத்தை கடந்தது
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று மட்டும் 2033 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 35,086 ஆக உயர்ந்திருக்கிறது. மகாராஷ்டிராவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,249 ஆகவும் அதிகரித்துள்ளது. மும்பையில் மட்டுமே 20,150 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
2-வது இடத்தில் தமிழகம்
மகாராஷ்டிராவுக்கு அடுத்ததாக தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,760 ஆக உயர்ந்தது. தமிழகத்தில் கொரோனா மரணங்கள் 81 ஆகவும் அதிகரித்திருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் சென்னையில்தான் மிக அதிக பாதிப்பு உள்ளது. சென்னையில் மொத்தம் 7,125 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
366 பேருக்கு கொரோனா
3-வது இடத்தில் குஜராத் மாநிலம் உள்ளது. குஜராத்தில் இன்று 366 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் குஜராத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,746 ஆக உள்ளது. ஆனால் குஜராத்தில் கொரோனா மரணங்கள் இந்திய அளவில் 2-வது இடத்தில் உள்ளது. மொத்தம் 694 பேர் குஜராத்தில் கொரோனாவால் மாண்டு போயுள்ளனர்.
299 பேருக்கு பாதிப்பு
டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இன்று 299 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மொத்தம் 10,054 பேர் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கினறனர். டெல்லியில் மட்டும் கொரோனா உயிரிழப்புகள் 160 ஆகும். ராஜஸ்தானில் 5,507 பேரும் மத்திய பிரதேசத்தில் 5,236 பேரும் கொரோனா பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர்.
கேரளாவில் 29 பேருக்கு பாதிப்பு
தென்னிந்தியாவில் கேரளாவில் இன்று 29 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 21 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்; 7 பேர் பிற மாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு வந்தவர்கள். கேரளாவில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 630 என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.