அச்சுறுத்தும் கொரோனா.,. இதுவரை இந்தியாவில் ஒன்றுதான்.. இனி வரப்போகிறது 19.. மத்திய அரசு முடிவு
டெல்லி: கொரோனா வைரஸ் பரிசோதனை மையம் என்றால் நாட்டில் தற்போது புனேவில் மட்டும் தான் உள்ளது. இந்நிலையில் இந்தியா முழுவதும் 19 இடங்களில் கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்களை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
Recommended Video
இந்தியாவில் 29 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதை கட்டப்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இத்தாலியில் இருந்து ஜெய்ப்பூருக்கு சுற்றுலா வந்த 16 பேர் மற்றும் அவர்களுக்கு கார் ஓட்டிய இந்தியாவைச் சேர்ந்த டிரைவர் ஆகியோருக்கு கொரானா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதேபோல் பெங்களூரு சாப்ட்வேர் என்ஜினியர், டெல்லியைச் சேர்ந்த ஒருவர் உள்பட மொத்தம் 29 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பரிசோதிக்க உத்தரவு
நாடு முழுவதும் 12 நாடுகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விமான நிலையங்களில் சோதிக்கப்பட்டு வந்தனர். ஆனால் வெளிநாட்டு பயணிகளிடம் இருந்து தான் இந்தியாவிற்கு கொரோனா வைரஸ் பரவி இருக்கிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் இனி அனைத்து நாடுகளைச் சேர்ந்த பயணிகளையும் பரிசோதித்த பின்னரே அனுமதிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
அவரச ஆலோசனை
இதனிடையே பிரதமர் மோடி தலைமையில் நேற்று அனைத்து அமைச்சக உயர் அதிகாரிகள் மட்டத்திலான அவசர கூட்டம் டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் மாநிலஅரசுகளுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டிய வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தார். மேலும் வைரஸ் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மருத்துவ ஏற்பாடுகள், வைரஸ் பரவுவதை தடுக் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
கொரோனா பரிசோதனை
பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பை சோதனையிட புனேயில் மட்டுமே ஆய்வு மையம் உள்ளது. இதனால் 19 கொரோனா வைரஸ் சோதனை மையங்களை நாட்டில் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு நிலவரத்தை தினமும் பிரதமர் மோடி கவனித்து வருகிறார்" இவ்வாறு கூறினார்.
இந்தியாவில் ஒரே இடம்
புதிதாக கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்கள் அமைய உள்ள 19 இடங்கள் எவை எவை என்பது குறித்து மத்திய அரசு இன்னமும் அறிவிக்கவில்லை. தற்போதைய நிலையில் நாட்டில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் மட்டுமே பரிசோதனை மையம் உள்ளது. இங்கு மட்டுமே அனைத்து வகையான வைரஸ் நோய்களையும் கண்டுபிடிக்க கூடிய ஆராய்ச்சி மற்றும் பரிசோதனை கூடம் உள்ளது. இந்தியாவின் வேறு எந்த நகரிலும் கிடையாது.