சூப்பர்.. 1500 பேரில் 1103 பேர் பரிசோதனைக்கு ஆஜர்.. மற்றவர்கள் டெல்லியில்.. தமிழகம் நிம்மதி!
616 பேரும் பரிசோதனைக்கு முன்வர வேண்டும்
டெல்லி: டெல்லிக்குப் போயிருந்த 1500 பேரில் 1103 பேர் தமிழகம் திரும்பியுள்ளதாகவும் மற்றவர்கள் டெல்லியில் இருப்பதாகவும் தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் கூறியுள்ளதால், இதுதொடர்பாக நிலவி வந்த குழப்பம் விலகி மக்களிடையே ஒரு வித நிம்மதிப் பெருமூச்சு நிலவுகிறது.
Recommended Video
டெல்லியில் நிஜாமுதீன் மசூதியில் இஸ்லாமியர்களின் மாநாடு கடந்த மார்ச் 1ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடந்தது.. இந்த மாநாட்டில் தமிழகத்தை சேர்ந்த 1,500 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இவர்களில் பலருக்கு கொரோனாவைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது... மீதமுள்ளவர்கள் தானாக முன்வந்து பரிசோதித்து கொள்ளுமாறும் தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
கொரோனா
கொரோனாவின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் டெல்லியில் இஸ்லாமிய அமைப்பின் சார்பில் நடந்த மாநாட்டுக்கு சென்று திரும்பியவர்களே இந்த பாதிப்பில் சிக்கியவர்களில் அதிகம் இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
நடவடிக்கை
இஸ்லாமியர்களுக்கு எதிராக சிலர் இதுபோன்று நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.. டெல்லி சென்று வந்தவர்களால் இந்த நோய் பரவல் அதிகரித்துள்ளதால் அவர்களாக முன்வந்து ஆஸ்பத்திரியில் டெஸ்ட் செய்துகொள்ளுங்கள்... இதில் மதவேறுபாடு காட்ட வேண்டாம் என்று பகிரங்கமாகவே சோஷியல் மீடியாவில் செய்திகள் பரபரப்பட்டு வருகின்றன.
சுயபரிசோதனை
யாரால், யாருக்கு வைரஸ் வந்தது என்பதை ஆராயக்கூடிய நேரம் இல்லை இது என்றே சொல்ல வேண்டியுள்ளது.. அப்படியே ஆராய்வதாலும் அதனால் எந்த பலனும் கிடைக்க போவது இல்லை.. நம்மை நாமே தற்காத்து கொள்வதும், சுயபரிசோதனைக்கு உட்படுத்தி கொள்வதிலுமே கவனம் காட்ட வேண்டி உள்ளது.. அதேசமயம், மாநாட்டுக்கான அனுமதியை தந்தது யார்? இந்தியாவில் கொரோனா தொற்று ஆரம்பம் என்று செய்திகள் வெளியிட்ட நிலையில், பொதுமக்களும் எதற்காக இந்த மாநாட்டில் பங்கெடுத்து கொண்டார்கள் என்ற ஆராய்ச்சியும் இப்போது தேவையில்லை.
தொற்று
அதுமட்டுமல்ல மாநாட்டுக்கு சென்று வந்து 21 நாட்கள் ஆனபிறகுதான் இதன் அறிகுறியே ஒருவருக்கு தெரியும் என்கிறார்கள் டாக்டர்கள்.. அதனால் மாநாடு நடந்து அனைவரும் ஊர் திரும்பிய கணக்கை வைத்துதான் இந்த டெஸ்ட்கள் நடத்தப்பட்டு வருகின்றன.. அந்த அடிப்படையில்தான் தமிழக அரசும் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.. தொற்று பாதிக்கப்பட்டு கண்காணிப்பில் உள்ளவர்களும் ஒப்புக் கொண்டு வருகின்றனர்.
ஏற்க முடியாது
அதேபோல, திட்டமிட்டு ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர்தான் வைரஸை பரப்புகிறார்கள் என்று சொல்வது ஜீரணிக்க முடியாதது.. இது முழுக்க முழுக்க அறியாமையில் நடந்ததான்.. அந்த மாநாட்டுக்கு சென்றவர்களில் யாருக்காவது தொற்று ஆரம்ப கட்டத்தில் இருந்திருக்கலாம்.. அவருக்கே தெரியாமல் இது மற்றவர்களுக்கும் பரவியிருக்குமே தவிர, நோய்க்கெல்லாம் காரணம் கற்பிப்பதும், அதற்காக ஒரு இனத்தையே குற்றஞ்சொல்வதும் ஏற்க முடியாதது.
தலைமறைவு
அந்த 616 யார், எங்கே இருக்கிறார்கள் என்று தெரியாமல் இருந்தது.. தானாக முன் வர தயங்கி கொண்டுள்ளனரா, அல்லது பயம், அவமானத்தில் தலைமறைவாக உள்ளனரா அவர்கள் அப்படி இருப்பது, அவர்களது குடும்பத்துக்கே ஆபத்தும்கூட என்று அறிவுறுத்தப்பட்டு வந்தது.. மேலும் நோய்க்கு மதம் தெரியாது.. இனம் தெரியாது.. நாடு தெரியாது.. டெல்லி போய் வந்தவர்கள் எல்லாம் அவர்களாகவே போய் சோதித்துக் கொள்வது அவர்களுக்கு மட்டுமல்ல, குடும்பத்தாருக்கும், அவர்களை சார்ந்தோருக்கும் நல்லது என்றும் வலியுறுத்தப்பட்டது.
அவசியம்
இந்நிலையில் டெல்லி சென்றவர்களில் 1103 பேர் பரிசோதனைக்கு திரும்பி வந்துவிட்டதாக சுகாதாரத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.. அவர்கள் அனைவருமே பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். மற்றவர்கள் டெல்லியிலேயே உள்ளனராம். இதுவரை எங்கெங்கு போனார்கள், யாருடன் தொடர்பில் இருந்தார்கள் என்பது சம்பந்தப்பட்டவர்களுக்குதான் தெரியும் என்பதால் அதை பற்றின விவரங்கள் இனிமேல்தான் சேகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத, கட்சி, கொள்கை, வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு இந்த கொள்ளை நோய்க்கு எதிராக அனைவரும் ஒன்றுதிரண்டு விரட்டுவது அவசியமாகிறது.
முன்வர வேண்டும்
எல்லாவற்றையும்விட, இந்த விஷயத்தில் யாரும் தவறான எந்தத் தகவலையும் பரப்பாமல் இருந்தாலே எல்லாமே தானாகவே சரியாகிவிடும்.. அரசின் அத்தியாவசியமான நடவடிக்கைகளுக்கு நாம் ஒத்துழைக்க வேண்டும்.. அதேபோல, பொதுமக்கள் அனைவருமே நாட்டின் ஆரோக்கியத்தையும், சமூக அமைதியையும் காக்க முன்வரவேண்டும், அரசுக்கு நம் ஒத்துழைப்பு தர வேண்டும் என்பதே நம்முடைய எதிர்பார்ப்பு!