உலக நாடுகளின் அழுத்தம் எதிரொலி.. 24 மருந்து பொருட்கள் மீதான ஏற்றுமதி தடை ரத்து.. மத்திய அரசு முடிவு!
டெல்லி: 24 மருந்து பொருட்கள் மற்றும் மூலக்கூறுகள் மீது இந்திய மத்திய அரசு விதித்து இருந்த ஏற்றுமதி தடையை தற்போது ரத்து செய்துள்ளது.
Recommended Video
கொரோனா காரணமாக உலகம் முழுக்க மருந்து பொருட்களின் தேவை அதிகரித்து உள்ளது. முக்கியமாக காய்ச்சலை குணப்படுத்தும் மருந்துகளின் தேவை அதிகரித்து உள்ளது.
உலகம் முழுக்க 13,45,751 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.உலகம் முழுக்க 74,647 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். நேற்று ஒரே நாளில் 5700 பேர் உலகம் முழுக்க கொரோனாவால் பலியாகி உள்ளனர்.
ஏற்றுமதி தடை வந்தது
இந்த நிலையில் கொரோனா காரணமாக இந்தியாவில் முக்கியமான மருந்துகள் மற்றும் மருந்துகளை தயாரிக்கும் மூலக்கூறுகளின் (active ingredient) ஏற்றுமதி தடை செய்யப்பட்டுள்ளது. அதன்படி பாராசிட்டமால் உள்ளிட்ட 30 அடிப்படை மருந்துகளின் ஏற்றுமதி தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் விட்டமின் பி12 , பி16, நியோமைசின் உள்ளிட்ட மருந்துகளை தயாரிக்கும் 24 மூலக்கூறுகள் மீதான ஏற்றுமதி தடை செய்யப்பட்டுள்ளது.அதேபோல் மலேரியா மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துக்கும் ஏற்றுமதி தடை செய்யப்பட்டுள்ளது.
தடைக்கு காரணம்
கொரோனா என்பது கிட்டத்தட்ட காய்ச்சல் போலவே செயல்படுகிறது. இதற்கு மருந்து கிடையாது. ஆனால் காய்ச்சல் வரும் போது ஏற்படும் ஜுரம், இருமல், மூச்சு விட சிரமம் போன்ற பிரச்சனைகள் கொரோனாவின் போதும் ஏற்படும். இதனால் தற்போது காய்ச்சல் மருந்துகள் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. அந்த மருந்துகள் மூலம் கொரோனாவை ஓரளவு கட்டுப்படுத்த முடியும். இதனால்தான் காய்ச்சலுக்கு அளிக்கப்படும் பாராசிட்டமால் மற்றும் வேறு சில மருந்து மூலக்கூறுகளின் ஏற்றுமதியை அரசு தடை விதித்து உள்ளது.
அழுத்தம்
இந்த ஏற்றுமதி தடை காரணமாக உலகில் முன்னணி நாடுகள் இந்தியா மீது கோபத்தில் உள்ளது. ஜப்பான், ஆஸ்திரேலியா, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் இந்த மருந்துகளை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று இந்தியாவிடம் கேட்டு வருகிறது.அதேபோல் ஜி20 குழுவில் இருக்கும் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்சு, ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் இந்தியாவிடம் தடையை நீக்க அழுத்தம் தெரிவித்து வந்தது.
தடை ரத்து
இந்த நிலையில் 24 மருந்து பொருட்கள் மற்றும் மூலக்கூறுகள் மீது இந்திய மத்திய அரசு விதித்து இருந்த ஏற்றுமதி தடையை தற்போது ரத்து செய்துள்ளது. உடனடியாக இதன் தடை நீக்கப்பட்டு ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. விட்டமின் பி12 , பி16, நியோமைசின், அகிலோவிர், குளோராபினிக்கால், புரோஜெஸ்டரோன், கிலின்டாமைசின், எரித்ரோமைசின் உள்ளிட்ட 24 மருந்து பொருட்கள் மற்றும் மூலக்கூறுகள் மீதான ஏற்றுமதி தடை நீக்கப்பட்டுள்ளது.