இந்தியாவில் கொரோனா பரவும் வேகம் குறைந்துள்ளது.. ஆனால் ரிலாக்ஸ் ஆக வேண்டாம்.. சுகாதாரத்துறை அதிகாரி!
டெல்லி: இந்தியாவில் கொரோனா பரவும் வேகம் கொஞ்சம் குறைந்து உள்ளது, கொஞ்சம் நிதானம் அடைந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Recommended Video
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக 694 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 42 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர். 558 பேர் மருத்துவமனையில் இருக்கிறார்கள். மொத்தம் 18 பேர் கொரோனவால் பலியாகி உள்ளனர்.
இந்தியாவில் கேரளாவில் அதிகமாக 139 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் 126 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா இந்தியா
கடந்த வாரம் முழுக்க தினமும் இந்தியாவில் 70-80 பேருக்கு கொரோனா பரவியது. ஆனால் இன்று 50 பேருக்கு மட்டும் இதுவரை கொரோனா பரவி உள்ளது. நேற்று முதல் நாள் இந்தியாவில் 103 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. தற்போது அதே அளவு வேகத்தில் கொரோனா பரவவில்லை. படிப்படியாக கொரோனா பரவும் வேகம் குறைந்துள்ளது.
பேட்டியில் என்ன சொன்னார்
இது தொடர்பாக சுகாதாரத்துறை மூத்த அதிகாரி லாவ் அகர்வால் தெரிவிக்கையில், இந்தியாவில் கொரோனா பரவும் வேகம் குறைந்துள்ளது. புதிதாக அட்மீட் ஆகும் நபர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ளது. ஆனால் நாம் ரிலாக்ஸ் ஆக வேண்டிய நேரம் இல்லை இது. நாம் தொடர்ந்து தீவிரமாக இருக்க வேண்டும். கொஞ்சம் நிதானமாக கொரோனா பரவுகிறது.
விழிப்புடன் இருங்கள்
ஆனால் இது தொடக்க கால டிரெண்ட் மட்டும்தான். மக்கள் இன்னும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மக்கள் எல்லோரும் தனிமையில் இருக்க வேண்டும். வீட்டிற்குள் இருக்க வேண்டும். மக்கள் தனியாக இருப்பதன் அவசியத்தை உணர வேண்டும். யாரும் இதை பற்றி கவலைப்பட கூடாது. இன்னும் சில நாட்களுக்கு மட்டும்தான் இந்த கட்டுபாடுகள் எல்லாம்.
வெளியே செல்வதை தவிருங்கள்
மக்கள் கூட்டம் கூட்டமாக கடைக்கு செல்வதை குறைக்க வேண்டும். அதேபோல் மக்களுக்கு இப்போது அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. போதுமான அளவில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும். அதனால் மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். மக்கள் யாரும் அவசரப்பட்டு மருத்துவமனை செல்ல வேண்டாம் என்று சுகாதாரத்துறை மூத்த அதிகாரி லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.