இந்தியாவில் முதல்முறையாக தனியார் லேப்களிலும் கொரோனா பரிசோதனைக்கு அனுமதி.. ரூ. 4500 நிர்ணயம்
டெல்லி: இந்தியாவில் முதல்முறையாக தனியார் லேப்களிலும் கொரோனா பரிசோதனைக்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது. இதன்படி அங்கு ரத்த மாதிரிகளில் கொரோனா இருக்கிறதா என சோதனை செய்ய ரூ 4500 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவால் இந்தியாவில் 315 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அது போல் பலி எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. மேலும் 60 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நாளுக்கு நாள் கோவிட் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
வெளிநாட்டில் இருந்து வருவோருக்கு இந்த நோய் பாதிப்பு இருக்கிறதா என்பதை அறிய ரத்த மாதிரிகள் எடுத்து சோதனை செய்யப்படுகிறது. இது முழுக்க அரசு பரிசோதனை கூடங்களில் மட்டுமே செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் டெஸ்டிக் பணிகளை விரிவுப்படுத்தவும் விரைவுப்படுத்தவும் தனியார் லேப்களிலும் சோதனை நடத்த அனுமதிக்குமாறு பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த வைரஸ் சமுதாய பரவலான 3ஆவது நிலைக்கு வந்துவிட்டால் பாதிப்புகள் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்தியாவில் எடுக்கப்படும் ரத்த மாதிரிகள் புணேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு சோதனை செய்யப்பட்டு வந்தன. இதையடுத்து 51 தனியார் மருத்துவமனை மற்றும் ஆய்வகங்களுக்கு கொரோனா சோதனை செய்ய உரிமம் வழங்க ஐசிஎம்ஆர் முடிவு செய்து அதற்கான அனுமதியை அளித்துள்ளது. இந்த சோதனைகள் அனைத்து ஐசிஎம்ஆரின் விதிகளுக்குட்பட்டு நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி இந்த கோவிட் சோதனைக்கான கட்டணங்கள் ரூ 4500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதுதான் அதிகபட்ச கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தில் கோவிட் பாதித்தவர் என சந்தேகிக்கப்படும் நபருக்கு சோதனை கட்டணம் ரூ 1500 , உறுதி செய்வதற்கான கட்டணம் ரூ 3000 ஆகியவை அடங்கும்.
எனினும் தேசிய பொது சுகாதார நெருக்கடியை உணர்ந்து மத்திய அரசு இலவசமாக செய்து வருகிறது. அரசை பொருத்தமட்டில் ஒவ்வொருவருக்கும் கோவிட் சோதனை செய்ய ரூ 6500 கட்டணமாக செலுத்தி வருகிறது. மேலும் கோவிட் பாதித்த நபர்கள் வெளியே வந்தால் மற்றவர்களுக்கு பரவிவிடும் என்பதால் அவர்களின் ரத்த மாதிரிகளை வீட்டுக்கே சென்று எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த சோதனைகள் கைதேர்ந்த வல்லுநர்கள் மூலமே நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐசிஎம்ஆர் இயக்குநர் பார்கவா கூறுகையில் தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் இந்த சோதனைகளை முற்றிலும் இலவசமாக செய்ய கோரிக்கை விடுத்தோம். ஆனால் அவர்களை கட்டாயப்படுத்த முடியாது.
எனவே மானிய விலையான ரூ 4500 கட்டணத்தை நிர்ணயித்தோம். ஆனால் இந்த சோதனைக்கு அரசு செலவிடும் தொகை ஒருவருக்கு ரூ 6500 ஆகும் என தெரிவித்துள்ளார்.