குஜராத் சபர்மதி ஆற்றில் கொரோனா தடயங்கள்.. நீர்நிலைகள் மூலம் வைரஸ் பரவுமா? ஐஐடி ஆய்வாளர்கள் விளக்கம்
டெல்லி: குஜராத்திலுள்ள சபர்மதி ஆறு மற்றும் இரண்டு குளங்களில் கொரோனா வைரசிற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா 2ஆம் அலை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தது. தினசரி கொரோனா பாதிப்பு அதிகபட்சமாக நான்கு லட்சம் வரைகூட சென்றது.
ஆபாச வீடியோ மூலம் மாதம் 7 லட்சம் வருமானம்.. 2 சொகுசு கார்கள், 2 பங்களாக்களை குவித்த பப்ஜி மதன்!
அதேபோல தினசரி உயிரிழப்புகளும் முன்னெப்போதும் இல்லாத வகையில் நான்காயிரத்தைத் தாண்டியது. இந்த மோசமான பாதிப்புகளிலிருந்து தற்போது தான் மெல்ல மீண்டு வருகிறோம்.
கங்கை நதி
கொரோனா 2ஆம் அலையில் இந்தியா சந்தித்த பாதிப்புகள் மிக மோசமாக இருந்தது. ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவமனைகளில் படுக்கைகளுக்குப் பற்றாக்குறை என நோயாளிகள் எதிர்கொண்ட சிரமங்கள் ஏராளம். கடந்த மாதம் பீகார் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் கங்கை ஆற்றில் கொரோனா நோயாளிகளின் சடலங்கள் மிதந்து வந்ததை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்துவிட மாட்டார்கள். கொரோனாவின் தீவிர தன்மையை எடுத்துரைக்கும் வகையில் இது இருந்தது.
சபர்மதி ஆற்றில் கொரோனா
இந்நிலையில் குஜராத் மாநிலத்திலுள்ள சபர்மதி ஆற்றில் கொரோனா வைரசின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஐஐடி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்காக காந்திநகர் ஐஐடி மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் சபர்மதி ஆறு, சந்தோலா மற்றும் காங்க்ரியா ஏரிகளிலிருந்து மாதிரிகள் சேகரித்துள்ளன. அதில் ஆய்வுகளை நடத்தியபோது, அதில் கொரோனா மாதிரிகள் இருந்ததை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆபத்து அதிகம்
இது குறித்து காந்திநகர் ஐஐடி பேராசிரியர் மனிஷ் குமார் கூறுகையில், ஏரிகள் மற்றும் ஆறுகளில் SARS-CoV-2 இருப்பது மிகவும் ஆபத்தான நிலைக்கு வழிவகுக்கும். எனவே, நாடு முழுவதும் உள்ள நீர்நிலைகளில் இதுபோன்ற ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். நீர்நிலைகளில் கொரோனா வைரஸ் அதிக காலம் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகமாக உள்ளது. எனவே இது குறித்து தாமதமின்றி ஆய்வுகள் நடத்தப்பட்ட வேண்டும் என்றார்.
விரிவான ஆய்வு தேவை
முன்னதாக, பெங்களூரில் நகரக் கழிவுநீர் வடிகால் அமைப்பில் பரவும் கொரோனா குறித்துக் கண்காணிக்கக் கர்நாடக அரசு ஒரு குழுவை அமைத்திருந்தது. இதேபோல நீர்நிலைகளில் கொரோனா எத்தனை நாள் இருக்கும், இதனால் ஆபத்து ஏற்படுமா என்பது குறித்து தெளிவான தகவல்கள் இல்லை என்பதால் விரிவான ஆய்வுகள் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.