2021-ன் முதல் காலாண்டில் கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வரும்: மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்
டெல்லி: 2021-ம் ஆண்டின் முதலாவது காலாண்டில் கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வரும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியை எட்டும் நிலையில் உள்ளது. கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கையும் உலக நாடுகளில் 2 கோடியை தாண்டியுள்ளது.
கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் படுதீவிரமாக முயற்சித்து வருகின்றன. கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டுபிடித்துவிட்டதாக ரஷ்யா தெரிவித்திருக்கிறது.
இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகம், அஸ்ட்ரா செனிகா நிறுவனம் இணைந்து கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கின. இதனை இந்தியாவில் சீரம் நிறுவனம் பரிசோதனைக்குட்படுத்தி வந்தது.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 3 கோடியை தொடுகிறது- உயிரிழப்புகள் 10 லட்சத்தை எட்டுகிறது
இந்த நிலையில் அஸ்ட்ரா செனிகா நிறுவனம் பரிசோதனையை நிறுத்தியதால் இந்தியாவின் சீரம் நிறுவனமும் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையை தற்காலிகமாக நிறுத்தியிருக்கிறது. சமூக வலைதள உரையாடல்களில் நேற்று மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியதாவது:
கொரோனாவுக்கான தடுப்பு மருந்து எப்போது கிடைக்கும் என்பதற்கான தேதி நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால் 2021-ம் ஆண்டின் முதல் காலாண்டில் கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வந்துவிடும்.
கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு சோதனை செய்வதில் முழுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா தடுப்பு மருந்தின் பாதுகாப்பு, விலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது.
கொரோனா தடுப்பு மருந்து தயாராகிவிட்டால் முதல் நபராக நானே அதை போட்டுக் கொள்வேன் . இவ்வாறு மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறினார்.