தடுப்பு மருந்து...உலகிற்கே இந்தியா முன்னோடி... கொரோனாவுக்கும் ஒத்துழைக்க... பில் கேட்ஸ் அழைப்பு!!
டெல்லி: உலகிற்கே தடுப்பு ஊசி தயாரிப்பதில் இந்தியாதான் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. உலகமே இந்தியாவைத்தான் உற்று நோக்கி வருகிறது. கொரோனாவுக்கு தடுப்பு மருந்து தயாரிப்பதிலும் இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பில் கேட்ஸ் அளித்த பேட்டியில், ''தடுப்பு மருந்து தயாரிப்பதில் இந்தியா முன்னோடியாக இருந்து வருகிறது. கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பதிலும் இந்தியாவின் ஒத்துழைப்பு நமக்குத் தேவை. வளரும் நாடுகளுக்கு இந்தியாவின் திறன் கிடைக்க வேண்டும் என்று உலகமே இன்று எதிர்பார்க்கிறது.
ஆஸ்ட்ராஜெனிகா, ஆக்ஸ்போர்டு, நோவாக்ஸ், ஜான்சன் அண்ட் ஜான்சன் யாருடைய தயாரிப்பு மருந்தாக இருந்தாலும், அந்த மருந்தை இந்தியாவில் பெரிய அளவில் தயாரித்து கொடுக்க வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. அடுத்த ஆண்டு இந்தியாவில் இருந்து பெரிய அளவில் தடுப்பு மருந்து வெளிவரும்.
இந்தியாவில் இருந்து எவ்வளவு சீக்கிரம் மருந்து கிடைக்கிறதோ அதைப் பெறுவதற்கு அனைவரும் தயாராக இருக்கிறார்கள். அந்த மருந்து பாதுகாப்பானது, திறன் வாய்ந்தது என்று அறிந்தவுடன், அடுத்த ஆண்டு பெரிய அளவில் தயாரிப்பதற்கு முடிவு செய்யப்படும். அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் பெரும்பாலான தடுப்பு மருந்துகள் மக்களின் பயன்பாட்டுக்கு வரலாம்'' என்றார்.
எந்த பாலை போட்டாலும் திருப்பி அடிக்கும் எடப்பாடி.. நீட் தேர்வை கொண்டு வந்தது யார்?.. காரசார விவாதம்
இந்தியாவில் மூன்று கொரோனா தடுப்பு மருந்துகள் ஆய்வில் உள்ளன, இவற்றில் ஆக்ஸ்போர்டு தயாரிப்பான கோவிஷீல்ட் மற்றும் இந்தியாவின் பாரத் பயோடெக் தயாரிப்பான கோவாக்சின் மருந்துகள் முக்கியமானவை. ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி-யும் மனித ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று தெரிகிறது. இந்த நிலையில்தான் பில் கேட்ஸ் அவ்வாறு பேசியுள்ளார். இந்தியாவில் ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பு மருந்தை தயாரித்து வழங்குவதற்கு புனேவில் இருக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் உடன் பில் கேட்ஸின் ''தி பில் மெலிந்தா கேட்ஸ் பவுண்டேஷன்' கூட்டு சேர்ந்துள்ளது.