ஆகஸ்ட் 15 எப்படி சாத்தியம்? கோவாசின் (COVAXIN) எப்படி நடைமுறைக்கு வரும்.. ஐசிஎம்ஆர் அதிரடி விளக்கம்!
டெல்லி: கொரோனாவிற்கு எதிராக இந்தியாவில் தயாரிக்கப்பட்டு இருக்கும் கோவாசின் (COVAXIN) தடுப்பு மருந்து எப்படி ஆகஸ்ட் 15க்குள் நடைமுறைக்கு வரும், இதன் சோதனைகள் எப்படி செய்யப்படும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) விளக்கம் அளித்துள்ளது.
கொரோனாவிற்கு எதிராக இந்தியாவில் தயாரிக்கப்பட்டு இருக்கும் கோவாசின் (COVAXIN) மருந்து அதிக கவனம் ஈர்த்துள்ளது . ஹைதராபாத்தில் இருக்கும் பாரத் பயோடெக் ( Bharat Biotech) என்ற நிறுவனம் தயாரித்த கோவாசின் (COVAXIN) என்ற மருந்துக்கு மனிதர்கள் மீது சோதனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்), தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட் ஆகியவை பரத் பயோடெக் நிறுவனம் உடன் இணைந்து இந்த மருந்தை உருவாக்கி உள்ளது. இதன் சோதனை தீவிரமாக நடந்து வருகிறது.
சென்னையில் அதிரடி திருப்பம்.. மற்ற மாவட்டங்களில் மோசம்.. தமிழகத்தில் இன்று 4280 பேருக்கு கொரோனா!
எப்போது வரும்
இந்த நிலையில் கோவாசின் (COVAXIN) மருந்தை ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் வெளியிட இருப்பதாகவும். சோதனைகளை வெற்றிகரமாக முடிந்தால் ஆகஸ்ட் 15ம் தேதி இந்த மருந்தை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இதற்கான சோதனைகளை விரிவுபடுத்தி வேகமாக்க வேண்டும் என்றும் ஐசிஎம்ஆர் தெரிவித்து இருந்தது. இது ஒரு பக்கம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது, இன்னொரு பக்கம் எப்படி ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் மருந்து பயன்பாட்டிற்கு வரும், அது பாதுகாப்பு இல்லை என்று கேள்விகள் எழுந்தது.
என்ன விளக்கம்
இதற்கு தற்போது ஐசிஎம்ஆர் விளக்கம் அளித்துள்ளது. அதில், நாங்கள் கோவாசின் (COVAXIN) சோதனையை வேகப்படுத்தி இருக்கிறோம். தேவையில்லாத, அவசியம் இல்லாத தடங்கலாக இருக்கும் சில பாரம்பரிய விதிகளை மட்டும் பின்பற்ற போவது இல்லை. மற்றபடி உலக மருத்துவ விதிகளுக்கு உட்பட்டுதான் மருந்தை சோதனை செய்து வருகிறோம்.
திறன்
ஐசிஎம்ஆர் மருத்துவர்கள் மற்றும் அறிஞர்களின் திறனை சந்தேகம் கொள்ள கூடாது. அவர்கள் திறமையானவர்கள். தேவையான அணைத்து விதிகளையும் கண்டிப்பாக பின்பற்றி வருகிறோம். தேவையற்ற விதிகளை மட்டுமே தவிர்த்து வருகிறோம். இதேபோல்தான் இந்தியாவில் சுயமாக கொரோனா சோதனை கருவிகள் உருவாக்கப்பட்டது . அதேபோல் மருந்தையும் துரிதமாக உருவாக்க உள்ளோம்.
மிக வேகம்
மிக வேகமாக முதல்கட்ட சோதனைகளை முடித்துவிட்டு, மக்கள் தொகை அடிப்படையிலான சோதனையை தொடங்க போகிறோம். எந்த தாமதமும் இன்றி இந்த பணிகளை செய்வோம். அதே சமயம் முக்கியமான விதிகள் எல்லாம் கடைபிடிக்கப்படும். உலக மருத்துவ விதிகள், நடைமுறைகள் எல்லாம் இதில் பின்பற்றப்படும். மக்கள் இது தொடர்பாக தெரிவித்துள்ள கருத்துக்களை ஐசிஎம்ஆர் கண்டிப்பாக வரவேற்கிறது, என்று மருத்துவ ஆராய்ச்சி கழகம் விளக்கம் அளித்துள்ளது.