கொரோனா வைரஸ்.. தற்காப்பு நடவடிக்கைகள் என்ன?.. மாஸ்க் அணிவது எப்படி? தெரிந்து கொள்ளுங்கள்!
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கான அறிகுறிகள், தற்காப்பு நடவடிக்கைகள் என்ன என்று இங்கே விளக்கப்பட்டுள்ளது.
டெல்லி: கொரோனா வைரஸ் தாக்குதலுக்கான அறிகுறிகள், தற்காப்பு நடவடிக்கைகள் என்ன என்று இங்கே விரிவாக விளக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு மாஸ்க் அணிவது எப்படி என்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுக்க வேகமாக பரவி வருகிறது. சீனாவை தாக்கிய கொரோனா வைரஸ் அந்நாட்டை முடக்கி போட்டுள்ளது. சீனாவில் வுஹன் நகரத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒரு மனிதரில் இருந்து இன்னொரு மனிதருக்கு பரவக்கூடியது. இப்போதுதான் இந்த வைரஸ் புதிய வேகம் எடுத்துள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் இது நினைத்ததை விட அதிக வேகத்தில் பரவி வருகிறது. இந்தியாவில் 7 பேருக்கு இந்த வைரஸ் பரவி உள்ளது. டெல்லியில் 6 பேருக்கு, ஹைதராபாத்தில் ஒருவருக்கு வைரஸ் பரவி உள்ளது.
பலி எண்ணிக்கை
கொரோனா வைரஸால் சீனாவில் பலி எண்ணிக்கை 3100 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுக்க உள்ள பலி எண்ணிக்கை ஆகும் இது. சீனாவில் மட்டும் 3000 பேருக்கும் மேல் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு பலியாகி இருக்கிறார்கள். அதேபோல் உலகம் முழுக்க மொத்தம் 91000 பேர் வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்துள்ளனர். இந்த வைரஸ் தாக்குதலுக்கான அறிகுறிகள், தற்காப்பு நடவடிக்கைகளை இங்கே பார்க்கலாம்.
அறிகுறிகள் என்ன
இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டால், பின்வரும் அறிகுறிகள் மூலம் அதை கண்டுபிடிக்க முடியும்.
ஜலதோஷம்
காய்ச்சல்
நெஞ்சில், மூக்கில், தொண்டையில் சளி தொல்லை
வறண்ட இருமல், வறண்ட தொண்டை
லேசான நெஞ்சு வலி
மூச்சு விடுவதில் சிரமம்
சிலருக்கு வயிற்றுப்போக்கும் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. சாதராண காய்ச்சலுக்கு இதே அறிகுறிதான் என்பதால், இதை அலட்சியமாக எடுக்காமல் உடனே மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.
தடுக்கும் முறைகள்:
இந்த கொரோனா வைரஸில் இருந்து தற்காத்துக் கொள்ள நிறைய வழிகள் உள்ளது.
முதலில் சுத்தமாக இருக்க வேண்டும், அடிக்கடி கை கழுவ வேண்டும், குளிக்க வேண்டும். கைகளின் பின்பக்கத்தை கண்டிப்பாக கழுவ வேண்டும். நக இடுக்குகளை கழுவ வேண்டும்.
வெளியே சென்றுவிட்டு வந்தால் உடலை சுத்தம் செய்ய வேண்டும் .
இந்த வைரஸ் நீர் குமிழிகள் மூலம் பரவும். அதனால் தும்மல், இருமல் உள்ளவர்கள் அருகே செல்ல கூடாது. உங்களுக்கு தும்மல், இருமல் இருந்தால், முகத்தை மாஸ்க் கொண்டு மூடுவது நல்லது. என்95 மாஸ்க்கை பயன்படுத்த வேண்டும்.
உலக சுகாதார மையம் கொடுத்த அறிவுரையின் படி உங்களுக்கு வைரஸ் தாக்குதல் ஏற்படாமல் இருக்க குறைந்தது மற்றவர்களிடம் இருந்து 3 அடி தள்ளி நடக்க வேண்டும்.
கூட்டமாக இருக்கும் இடங்களை தவிர்க்க வேண்டும்.
வெவ்வால்களை தொடுவது, விலங்குகள் உடன் விளையாடுவது, சரணாலயங்களுக்கு செல்வது, ட்ரெக்கிங் செல்வதை சில நாட்களுக்கு தவிர்க்கலாம்.
அதேபோல் அதிக அளவு தாடி, முடி வைத்து இருந்தால் அதையும் சுத்தமாக கழுவ அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாஸ்க் எப்படி அணிய வேண்டும்
உங்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுவது சிறப்பு.
தொடர்ந்து இருமல், தும்மல் இருந்தால் வெளியே செல்லாமல் உடனே மருத்துவரை அணுகிவிட்டு, வீட்டில் தனி அறையில் ஓய்வு எடுப்பது சிறப்பானது.
- உங்களுக்கு நோய் அறிகுறி இல்லாத போது மாஸ்க் அணிய வேண்டியது இல்லை
- தும்மல் இருமல் இருந்தால் மாஸ்க் அணியலாம்
- மருத்துவமனை சென்றால் மாஸ்க் அணியலாம்
- ஒரு மாஸ்க்கை 8 மணி நேரம் மட்டுமே அணியலாம்
- ஒரே மாஸ்க்கை மீண்டும் பயன்படுத்த கூடாது
- மாஸ்க் ஈரம் அடைந்தால் உடனே புதிய மாஸ்க் அணிய வேண்டும்
- கொரோனா வந்தால் என்95 மாஸ்க் மட்டுமே அணிய வேண்டும்
- மாஸ்கின் முன்பக்கத்தை தொட்டு அணிய கூடாது
- மாஸ்க்கை அடிக்கடி தொட கூடாது
- மாஸ்கின் பிளேட் பகுதியை தொட்டு, மூக்கில் சரியாக பொருந்தும்படி அணிய வேண்டும்
- மாஸ்க்கை சரியான குப்பை தொட்டிகளில் போட வேண்டும்
- கொரோன வைரஸ் இருந்தால் மாஸ்க்கை 5% பிளீச், 1% ஹைப்போகுளோரைட் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.