கொரோனா.. மருத்துவமனையிலிருந்து எஸ்கேப் ஆகும் பலர்.. அடுத்தடுத்த சம்பவங்கள்.. பின்னணி காரணம்!
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருக்கும் நபர்களில் சிலர் மருத்துவமனையில் இருந்து தப்பித்து ஓடுவது சமீப நாட்களில் வழக்கமாகி உள்ளது.
டெல்லி: கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருக்கும் நபர்களில் சிலர் மருத்துவமனையில் இருந்து தப்பித்து ஓடுவது சமீப நாட்களில் வழக்கமாகி உள்ளது. இந்தியாவில் நடக்கும் இந்த சம்பவங்கள் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
இந்தியாவில் நேற்று மட்டும் புதிதாக 18 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கியவர்கள் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்தது. இதுவரை இந்தியாவில் இந்த வைரஸ் காரணமாக மூன்று பேர் பலியாகி உள்ளனர்.
டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மூன்று பேர் பலியாகி உள்ளனர். மகாராஷ்டிராவில் மொத்தம் 40 பேருக்கு இந்த வைரஸ் தாக்கியுள்ளது.
எப்படி பரவுகிறது
இந்த வைரஸ் வேகமாக இந்தியாவில் பரவ மக்களின் அலட்சியமும் ஒரு காரணம் ஆகும். அதாவது நோய் அறிகுறி இருக்கும் மக்கள் யாரும் அதை வெளியே சொல்வது இல்லை. வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்து, வெளியே சொல்வது கிடையாது. அதோடு நோய் அறிகுறியோடு அவர்கள் பல இடங்களுக்கு, மக்கள் இருக்கும் பகுதிகளுக்கு சுற்றுகிறார்கள். இதுவும் வைரஸ் பரவ காரணம்.
என்ன காரணம்
அதேபோல் நோய் அறிகுறியோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நபர்கள் மருத்துவமனையில் தங்கி இருப்பது கிடையாது. இரவோடு இரவாக அவர்கள் மருத்துவமனையில் இருந்து எகிறி குதித்து வெளியே ஓடும் சம்பவங்களும் நடக்கிறது. பல மருத்துவமனையில் இருந்து இதுவரை 22 பேர் இப்படி தப்பித்து ஓடி இருக்கிறார்கள். மருத்துவமனையில் தங்காமல் அங்கிருந்து எஸ்கேப் ஆகி வேறு இடத்திற்கு சென்று விடுகிறார்கள்.
எத்தனை பேர் இப்படி
இந்தியாவில் இதுவரை இப்படி 22 பேர் மருத்துவமனையில் இருந்து வெளியே சென்றுள்ளனர். பெங்களூர் பெண் ஒருவர் இப்படி வெளியேறி டெல்லிக்கு சென்றார். அவர் மூலம் பலருக்கு கொரோனா வைரஸ் பரவி இருக்கலாம் என்று அஞ்சப்டுகிறது. இதேபோல் உத்தரபிரதேசம், டெல்லி, கர்நாடகா, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள மருத்துவமனையில் இருந்து பலர் எகிறி குதித்து வெளியே சென்றனர்.
எதனால் இப்படி
இதற்கு தற்போது காரணம் வெளியாகி உள்ளது. மருத்துவமனை நிர்வாகிகள் தங்களை மோசமாக நடத்துகிறார்கள். நிர்வாகம் மிக மோசமாக உள்ளது. தங்களை கிருமிகளை போல் நடத்துகிறார்கள் என்று இப்படி தப்பித்து ஓடிவரும் நபர்கள் தெரிவிக்கிறார்கள். அதேபோல் அரசு மருத்துவமனையில் சுத்தம் இல்லை. கழிப்பறை மிக மோசமாக உள்ளது. சுத்தமான தண்ணீர் இல்லை.
மிக மோசமான நிலை
அங்கு ஒரு நாளுக்கு மேல் எங்களால் இருக்க முடியவில்லை. காலை உணவு என்று ஒரே ஒரு பிரெட் கொடுக்கிறார்கள். எங்களை தனியார் மருத்துவமனையில் சேர்வதற்கு கூட அனுமதிக்கவில்லை. அதனால்தான் நாங்கள் அங்கிருந்து வெளியேறி வீட்டிற்கு வருகிறோம். எங்களுக்கு போதுமான சிகிச்சை கிடைப்பதில்லை என்று இவர்கள் கூறுகிறார்கள்.
கேரளா நிலை
மற்ற மாநிலங்கள் இப்படி இருக்க ஆனால் கேரளாவில் நிலைமை வேறு மாதிரி இருக்கிறது. அங்கு மக்களுக்கு மிகவும் தூய்மையான உணவு அளிக்கப்படுகிறது. மதிய உணவாக மீன் குழம்பு கூட அளிக்கப்படுகிறது. அங்கு மக்கள் யாரும் வெளியேறி தப்பித்து செல்லவில்லை. 1250 பேர் அங்கு மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.