தனியார் மையங்களில் கொரோனா தடுப்பூசி விலை என்ன? அரசு முக்கிய அறிவிப்பு
டெல்லி: இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்துப் பல தவறான செய்திகள் பரவி வரும் நிலையில், இது குறித்து முக்கிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஜனவரி மாதம் 16ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதற்காக சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவன்தின் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இரண்டாம் கட்டமாக 60 வயதைக் கடந்தவர்களுக்கும் 45 வயதைக் கடந்த உடல்நிலை பாதிப்பு உடையவர்களுக்கும் மார்ச் 1ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மையங்களுடன் இணைந்து தனியார் மையங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
இரண்டாம் கட்ட பணிகள்
கொரோனா தடுப்பூசியின் முதல்கட்ட பணிகளின் சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட 3 கோடி முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அனைவருக்கும் தடுப்பூசிகள் இலவசமாகவே தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. ஆனால் இரண்டாம் கட்டத்தில் அரசு மையங்களில் மட்டுமே தடுப்பூசிகள் இலவசமாகச் செலுத்தப்படும் என்றும் தனியார் மையங்களில் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளக் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அரசு அறிவித்திருந்தது.
அதிருப்தி
மத்திய அரசின் இந்த அறிவிப்பிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி அனைவரும் இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், தடுப்பூசிக்குக் கட்டணம் வசூலிப்பது எந்த வகையில் நியாயம் என்றும் கேள்வி எழுப்பியிருந்தது. இருப்பினும், மத்திய அரசு தனது இதில் பதில் கூறவில்லை.
விலை என்ன
இந்நிலையில் தனியார் மையங்களில் கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என தகவல் பரவியது. இதை முற்றிலுமாக மறுத்துள்ள மத்திய அரசு, தனியார் மையங்களில் தடுப்பூசியின் ஒரு டோஸ் ரூ.250க்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. மாநில அரசின் சுகாதார காப்பீட்டு திட்டங்களின் கீழ் வரும் அனைத்து தனியார் மருத்துவமனைகளையும் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆயுஷ்மான் பாரத்-பி.எம்.ஜே.ஏ திட்டத்தின் கீழ் இயங்கும் 10,000 மருத்துவமனைகள், சி.ஜி.எச்.எஸ். இன் கீழ் 687 இயங்கும் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி வழங்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
அரசு கொள்முதல் செய்யும் விலை என்ன
கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் தனியார் மருத்துவமனைகளில் விற்பனை செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். கொரோனா பரவலின் வேகம் கடந்த சில நாட்களாக திடீரென்று அதிகரித்துள்ளதால் தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவில் மேற்கொள்ள இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கோவிஷீல்டு தடுப்பூசியைச் சலுகை விலையாக ரூ. 250க்கும் கோவாக்சின் தடுப்பூசியை ரூ.295க்கும் வாங்குவது குறிப்பிடத்தக்கது.