பிரதமர் எடுத்துக்கொண்ட தடுப்பூசி.. 81% தடுப்பாற்றல் கொண்டது.. பிரிட்டன் வகை கொரோனாவையும் தடுக்கும்
டெல்லி: பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி 81% வரை தடுப்பாற்றல் கொண்டது என்றும் அது பிரிட்டன் உருமாறிய கொரோனாவுக்கு எதிராகவும் பலனளிக்கும் என்றும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொள்ள சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதில் சீரம் தடுப்பூசி சுமார் 70% வரை தடுப்பாற்றல் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அப்போது கோவாக்சின் தடுப்பூசி மூன்றாம் கட்ட சோதனைக்கு முன்னரே ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இருப்பினும், பாரத் பயோடெக் நிறுவனம் தொடர்ந்து மூன்றாம் கட்ட மருத்துவ சோதனையை மேற்கொண்டிருந்தது.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி!
81% தடுப்பாற்றல்
இந்நிலையில், தற்போது கோவாக்சின் தடுப்பூசி மருந்தின் மூன்றாம் கட்ட மருத்துவ சோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது. மருத்துவ சோதனையின்போது சுமார் 25,800 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அவர்களில் 130 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கோவாக்சின் தடுப்பூசி 81% தடுப்பாற்றல் கொண்டது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
பக்கவிளைவுகள் இல்லை
மேலும், கோவாக்சின் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு மோசமான கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது கோவாக்சின் தடுப்பூசியை எடுத்துக்கொண்ட ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் அது மோசமாக இருப்பதில்லை என்று பாரத் பயோடெக் தெரிவித்துள்ளது. அதேபோல கேவாக்சின் தடுப்பூசி எடுத்துக்கொண்ட யாருக்கும் மோசமான பக்கவிளைவுகள் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது,
உருமாறிய கொரோனா
இந்தியாவில் தற்போது பிரிட்டன் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய வைரசும் பரவிவருகிறது. இந்த உருமாறிய கொரோனா வகைக்கு எதிராகத் தடுப்பூசிகளின் வேலை செய்யுமா என்பதே பொதுமக்களின் பெரிய கேள்வியாக இருந்தது. அதற்கும் பாரத் பயோடெக் நிறுவனம் பதில் அளித்துள்ளது. அதாவது கோவாக்சின் தடுப்பூசி பிரிட்டன் வகை கொரோனா வைரசையும் அழிக்கும் ஆற்றல் கொண்டது என்று மூன்றாம் கட்ட மருத்துவ சோதனை முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி
ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்துடன் இணைந்து உருவாக்கிய தடுப்பூசிதான் கோவாக்சின். மூன்றாம்கட்ட மருத்துவ சோதனை முடிவுகளுக்கு முன்னரே இந்தத் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது பெரிய சர்ச்சையானது. இருப்பினும், கடந்த மார்ச் 1ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி இந்தத் தடுப்பூசியையே எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.