கோவாக்சின் முதன்மையான தடுப்பூசி இல்லை, பேக்கப் மட்டுமே - எய்ம்ஸ் இயக்குநர் விளக்கம்
டெல்லி: கோவாக்சின் தடுப்பூசியின் அவசரக்கால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதற்கு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அது முதன்மையான தடுப்பூசியாகப் பயன்படுத்தப்படாது என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது,
புனேவைச் சேர்ந்த சீரம் நிறுவனத்தின் கோவிஷீட்டு மற்றும் ஹைரதாபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியின் அவசரக்கால பயன்பாட்டிற்கு நேற்று மத்திய அரசு அனுமதியளித்து.
இதைத்தொடர்ந்து இன்னும் சில நாட்களில் தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முறையான சோதனைக்கு முன் கோவாக்சின் அனுமதி? விமர்சிக்கும் காங்கிரஸ்... பாயும் பாஜக தலைவர்கள்
கோவிஷீட்டு
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பு மருந்தை இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் சீரம் நிறுவனம் உற்பத்தி செய்கிறது. இந்தத் தடுப்பூசியின் அவசரக்கால பயன்பாட்டிற்கு ஏற்கனவே பிரிட்டன் அனுமதியளித்திருந்தது.
கோவாக்சின்
அதேபோல பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ள கோவாக்சின் தடுப்பூசிக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மூன்றாம்கட்ட மருத்துவ சோதனை முடியாமலேயே கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் இது பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் பலரும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஒரே அனுமதி இல்லை
இது குறித்து எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா கூறுகையில், "இரு தடுப்பூசிக்கும் ஒரே மாதிரியான அனுமதி வழங்கப்படவில்லை. கோவாக்சின் ஒரு பேக்கப் தான். கொரோனா பாதிப்பு உயரவில்லை என்று சீரம் தடுப்பூசியே பயன்படுத்தப்படும். அடுத்த மாத தொடக்கத்தில் தான் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தரவுகள் நமக்குக் கிடைக்கும். அது திருப்திகரமாக இருக்கும்பட்சத்தில், சீரம் தடுப்பூசிக்கு வழங்கப்பட்டதைப் போன்ற அனுமதி கோவாக்சினுக்கும் வழங்கப்படும்.
பாதுகாப்பானது, செயல்திறன் தெரியாது
கோவாக்சின் பாதுகாப்பானது என்பதாலேயே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, அதன் செயல்திறன் தான் நமக்கு இப்போது தெரியாது. தற்போது கோவாக்சினை உற்பத்தி செய்து சேமித்து வைக்கவும் அனுதி அளிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன், ஐரோப்பிய நாடுகளைப் போல வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்தால் சீரம் நிறுவனத்தின் தடுப்பூசி மட்டும் நமக்கு போதாதது. இதன் காரணமாகவே பாரத் பயோடெக் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சோதனை
கோவாக்சின் தொடர்ந்து மருத்துவ சோதனைகளிலேயே பயன்படுத்தப்படும். இதனால் பாதுகாப்பு தன்மை மற்றும் பக்கவிளைவுகள் தொடர்ந்து நெருக்கமாகக் கண்காணிக்கப்படும். இவை தற்போது வழக்கமான தடுப்பூசியைப் போல எல்லா இடங்களிலும் கிடைக்காது. சோதனைகளில் மட்டுமே பயன்படுக்ககப்படும்" என்றார்.
விலங்களிடம் சோதனை
பாரத் பயோடெக் உடன் இணைந்து கோவாக்சினை உருவாக்கியுள்ள ஐ.சி.எம்.ஆரின் தலைவர் டாக்டர் பார்கவா கூறுகையில், "இதன் செயல்திறனை புனேவில் உள்ள தேசிய வைராலஜி மையத்தில் சோதனை செய்தோம். அங்கு விலங்களுக்கு இந்தத் தடுப்பூசி அளிக்கப்பட்டது. அப்போது இதன் செயல்திறன் திருப்திகரமாகவே இருந்தது.
மூன்று கட்ட சோதனை
அதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட முதல்கட்ட சோதனையில் 375 பேருக்கும், 2ஆம் கட்ட சோதனையில் 380 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. 3ஆம் சோதனையிலும் 22,500 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுவரை அவர்களுக்கு எவ்வித மோசமான பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை.
உருமாறிய கொரோனா
தற்போது உருமாறிய கொரோனாவின் பாதிப்பு 34 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளன. சில தடுப்பூசிகள் வைரசின் புரதத்தை மட்டும் அழிக்கும். இதுபோன்ற தடுப்பூசிகள் உருமாறிய கொரோனாவுக்கு எதிராகப் பலன் அளிக்காமல் போகலாம். ஆனால் கோவாக்சின் முழுமையாக வைரசை அழிக்கும் என்பதால், இவை நிச்சயம் பலன் அளிக்கும் என்று நம்புகிறேன். இருப்பினும், இதை உறுதி செய்ய அதிகளவில் சோதனைகள் நடத்தப்பட வேண்டும்"என்றார்.