"ஒருவேளை ஏதாவது பாதக விளைவு ஏற்பட்டால்.." கோவேக்சின் தடுப்பூசி போடும் முன்பு கேட்கப்படும் ஒப்புதல்!
டெல்லி: இந்தியாவில் இன்று முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் பணிகள் துவங்கி விட்டன. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்த கொரோனா தடுப்பூசி சிரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தால் கோவிஷீல்டு என்ற பெயரில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
பாரத் பயோடெக் மற்றும் ஐசிஎம்ஆர் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி கோவேக்சின் என்று அழைக்கப்படுகிறது.
இதில், கோவேக்சின் 3வது கட்ட டிரையலில் இருக்கும்போதே, அரசால் அவசரகால அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. ஆனால் அந்த தடுப்பூசி பாதுகாப்பானது என்று அரசு உறுதியாகச் சொல்கிறது.
"நீங்களும் எடுக்கோணும்.. நானும் எடுக்கோணும்.." இயல்பா பேசிய எடப்பாடியார்.. அப்படியே அசந்துபோன மதுரை!
ஒப்புதல் படிவம்
கோவேக்சின் மருந்தை யார் எடுத்துக் கொள்கிறார்களோ அவர்களிடம் ஒப்புதல் ஏற்பு படிவம் என்ற ஒன்று வழங்கப்படுகிறது. தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் அதைப் படித்து பார்த்து கையெழுத்து போடுவது கட்டாயம் ஆகும்.
தமிழகம்
தமிழகத்தைப் பொறுத்தவரையில், இன்று 160 இடங்களில் கோவிஷீல்டு மருந்துகளும், 6 இடங்களில் கோவாக்சினும் வழங்கப்படுகிறதாம். கோவேக்சின் தடுப்பூசி பெறுவோருக்கு வழங்கப்படும் ஒப்புதல் படிவத்தில், அப்படி என்ன கூறப்பட்டுள்ளது என்று தெரியுமா?
அவசரகால பயன்பாடு
பாரத் பயோடெக் COVID-19 தடுப்பூசி (COVAXINTM) என்பது அவசரகால அடிப்படையில் குடும்பநலன் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது. கட்டம் 1 மற்றும் கட்டம் 2 மருத்துவ சோதனைகளில், COVAXINT தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக ஆன்டிபாடிகளை உருவாக்கும் திறனை நிரூபித்துள்ளது. இருப்பினும், கோவாக்சினின் மருத்துவ செயல்திறன் இன்னும் நிறுவப்படவில்லை, இன்னும் 3ம் கட்ட மருத்துவ பரிசோதனை கட்டத்தில் உள்ளது. எனவே, தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதால் கோவிட் -19 தொடர்பான பிற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்று அர்த்தமல்ல.
இழப்பீடு
ஏதேனும் பாதகமான நிகழ்வுகள் அல்லது கடுமையான பாதகமான நிகழ்வுகள் ஏற்பட்டால், அரசால் நியமிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மையங்கள் / மருத்துவமனைகளில் உங்களுக்கு மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட தரமான பராமரிப்பு வழங்கப்படும். கடுமையான பாதகமான விளைவு தடுப்பூசியுடன் தொடர்புடையது என நிரூபிக்கப்பட்டால் இழப்பீடு ஸ்பான்சர் (பிபிஐஎல்) மூலம் செலுத்தப்படும். " இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.