கோவாக்சின், கோவிஷீல்ட்... தடுப்பூசி மிக்சிங் பரிசோதனைக்கு நிபுணர் குழு ஒப்புதல்
ஒருவருக்கு இருவேறு கொரோனா தடுப்பூசிகளை செலுத்தலாமா என்பது குறித்து பரிசோதனை மேற்கொள்ள நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லி: இந்தியாவில் ஒருவருக்கு முதல் டோஸ் கோவாக்சினும், இரண்டாவது டோஸ், கோவிஷீல்டும் போட்டு கொள்ளலாமா, அது பாதுகாப்பானதா என்பது குறித்து பரிசோதனை மேற்கொள்ள நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தீவிரம் அதிகரித்துக் கொண்டிருக்கும் இதேநேரத்தில் தடுப்பூசி தட்டுப்பாடும் அதிகமாக உள்ளது. தடுப்பூசி மட்டுமே கொரோனாவுக்கு எதிரான போரில் நம்மை காக்கும் ஒரே ஆயுதம் என்பதால், தடுப்பூசி தட்டுப்பாட்டினால் பாதிக்கப்படாமல் இருக்க எண்ணி மக்களில் சிலர் முதல் டோஸ் ஒரு தடுப்பூசியும், இரண்டாவது டோஸ் வேறொரு தட்டுபூசியும் மக்கள் போட்டுக்கொள்கின்றனர். இதனால் சிலருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளன.
இந்த சூழ்நிலையில் ஒருவருக்கு இருவேறு கொரோனா தடுப்பூசிகளை செலுத்தலாமா என்பது குறித்து பரிசோதனை மேற்கொள்ள நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த பரிசோதனை வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் நடைபெறவுள்ளது.
பரிசோதனைக்கு உட்படுத்தப்படுபவர்கள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்படுவார்கள். ஒரு குழுவுக்கு முதலில் கோவாக்சினும், இரண்டாவது டோஸ் கோவிஷீல்டும் போடப்படும். மற்றொரு குழுவுக்கு முதலில் கோவிஷீல்டும், இரண்டாவது டோஸ் கோவாக்சினும் செலுத்தப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
மிக்ஸ்ட் டோஸ் செலுத்துவது பாதுகாப்பானதுதான் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவும் நேரத்தில் இரண்டாவது டோஸ் மற்றும் கூடுதல் பூஸ்டர் டோஸூக்காக ஒரே தடுப்பூசியை நம்பி கொண்டிருக்க முடியாது என்பதால் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களினால் மிக்ஸ்ட் டோஸ் செலுத்தலாம் என்று கூறுகின்றனர்.
இந்தியாவில் தடுப்பூசி செலுத்த ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து பல்வேறு குழப்பங்கள், பிரச்சினைகள் நீடித்து வருகிறது. ஆரம்பத்தில் தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள மக்கள் தயக்கம் காட்டினர். கொரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு மக்களுக்கு தடுப்பூசி மீது நம்பிக்கை ஏற்பட்டதால் தற்போது அனைவரும் ஆர்வமாக தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வருகின்றனர்.
நாட்டில் போதுமான அளவு தடுப்பூசி கையிருப்பில் இல்லை. இது ஒரு பிரச்சினை என்றால்,மற்றொரு பக்கம் முதல் டோஸ் தடுப்பூசிக்கும், இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்கும் குறிப்பிட்ட கால இடைவெளி இருக்க வேண்டும் என்ற வரையறையும் விதிக்கப்பட்டது.
அதிலும் இரண்டு டோசும் ஒரே தடுப்பூசியைதான் எடுத்துக் கொள்ள வேண்டும். இருவேறு தடுப்பூசிகளை செலுத்தினால் பின்விளைவு ஏற்படும் என்பதால் தடுப்பூசி பற்றாக்குறையால் பல்வேறு இடங்களில் இரண்டாவது டோஸ் பலரால் போட்டு கொள்ளமுடியவில்லை. அதே நேரத்தில் தாய்லாந்து, இத்தாலி, கனடா உள்ளிட்ட நாடுகளில் ஒருவருக்கு இருவேறு தடுப்பூசிகளை செலுத்தும் நடைமுறை உள்ளது.
அதுபோன்று டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா ஒருமுறை செய்தியாளர்களை சந்தித்தபோது, இருவேறு தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வதினால் பிரச்சினை எதுவும் இருக்காது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இருவேறு தடுப்பூசிகள் செலுத்துவது பற்றி சமீபத்தில் கருத்து கூறியிருந்த உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன், பல நாடுகளில் கொரோனா 2வது அலை இன்னமும் முடிவுக்கு வரவில்லை. 3வது அலை குறித்த எச்சரிக்கையும் தொடர்ந்து விடுக்கப்பட்டு வருகிறது. கரோனா பரவலில் இருந்து காத்துக் கொள்ள தடுப்பூசி மட்டுமே ஆயுதம் என்று கூறியிருந்தார்.
இப்போதுள்ள நிலையில் கொரோனா தொற்றை தடுக்க இரு வெவ்வேறு நிறுவனத்தின் ஊசிகளை போட்டுக்கொள்ளலாம் என்று பரிந்துரை செய்வது ஆபத்தை ஏற்படுத்தக் கூடும். இன்னும் உலக சுகாதார நிறுவனம் அதில் ஒரு முடிவுக்கு வரவில்லை.
இதுவரை ஆய்வுகள் முடிந்து நமக்கு விடை கிடைக்கவில்லை. உரிய தரவுகளுடன் ஆய்வுகள் மேற்கொண்ட பிறகே இரு ஊசிகளை பயன்படுத்துவது பற்றி சிந்திக்க வேண்டும். கொரோனாவுக்காக இருவேறு தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளலாம் என்று கூறுவது சரியான நடவடிக்கை அல்ல என்றும் தெரிவித்திருந்தார்.
பாஜகவின் செம பிளான்.. உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிடம்.. 5 மாநகராட்சிகளை கேட்க திட்டம்?
இந்த நிலையில் இந்தியாவில் ஒருவருக்கு முதல் டோஸ் கோவாக்சினும், இரண்டாவது டோஸ், கோவிஷீல்டும் போட்டு கொள்ளலாமா, அது பாதுகாப்பானதா என்பது குறித்து பரிசோதனை மேற்கொள்ள நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.