சுதந்திர தினத்திற்கு முன் ஹேப்பி நியூஸ்.. கோவாக்சின் முதல் வெற்றி.. 2ம் கட்டத்துக்கு நகர்கிறது!
டெல்லி: கொரோனாவுக்கு இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கும் கோவாக்சின் தடுப்பு மருந்து முதல் கட்ட மனித பரிசோதனையை முடித்துக் கொண்டுள்ளது. இதில் வெற்றியும் கிடைத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாம் கட்ட மனித சோதனை வரும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் துவங்க இருக்கிறது. இந்த பரிசோதனைக்கு ஆட்களை தேர்வு செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது.
Recommended Video
முதல் கட்ட பரிசோதனை டெல்லியில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் மட்டும் இன்னும் முடியவில்லை. மீதம் இருக்கும் நாட்டின் 11 ஆய்வு மையங்களிலும் முடிக்கப்பட்டுவிட்டது. எய்ம்ஸ் மருத்துவமனை மட்டும்தான் அதிகமான நபர்களை அதாவது 16 பேரை முதல்கட்ட சோதனைக்கு உட்படுத்தி இருந்தது. எய்ம்ஸ் முதல் கட்ட ஆய்வுக்கு 100 பேரை பரிசோதனை செய்ய திட்டமிட்டு இருந்தது. ஆனால், இறுதியில் 16 பேரை மட்டும் எடுத்துக் கொண்டது.
ரஷ்யாவின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்படுமா.. உலக சுகாதார மையம் அளித்த அதிரடி பதில்
முதல் பரிசோதனை
இந்த மருந்தை கண்டுபிடித்து இருக்கும் ஐதராபாத்தில் இருக்கும் பயோடெக் நிறுவனம் முதலில் 12 மையங்களை தேர்வு செய்து, முதல் கட்ட பரிசோதனைக்கு 375 பேரை உட்படுத்தி இருந்தது. விரைவில் முதல் கட்ட ஆய்வு முடிவுகள் இபயோடெக் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த மருந்து முதல் கட்ட ஆய்வில் மிகவும் பாதுகாப்பானதாக இருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இருவருக்கு காய்ச்சல்
மகாராஷ்டிராவில் இருக்கும் நாக்பூரில் முதல் கட்ட பரிசோதனைக்கு 55 பேர் எடுத்துக் கொள்ளப்பட்டனர். இவர்களுக்கு முதல் டோஸ் கோவாக்சின் மருந்து கொடுக்கப்பட்டது. இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத மருத்துவ வட்டாரத்தில் கிடைத்த தகவலில், ''பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் இருவருக்கு மட்டும் காய்ச்சல் ஏற்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கு எந்தவித மருந்தும் கொடுக்கப்படாமல் கண்காணிக்கப்பட்டு வந்தனர். சில மணி நேரங்களில் அவர்கள் இருவரும் குணம் அடைந்துவிட்டனர்'' என்றார்.
சோதனை முடிவு
நாக்பூரில் இருக்கும் பருத்துவமனை அதன் முதல் கட்ட பரிசோதனை முடிகளை பாரத் பயோடெக் நிறுவனத்திடம் சமர்ப்பித்துவிட்டது. இரண்டாம் கட்ட பரிசோதனைக்கும் 13 பேர் எடுத்துக் கொள்ளப்பட்டு, அவர்களுக்கு நேற்று (வியாழக் கிழமை) இரண்டாம் கட்ட டோஸ் வழங்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜீவன் ரேகா
இதேபோல் கர்நாடகா மாநிலத்தில், பெல்காமில் இருக்கும் ஜீவன் ரேகா மருத்துவமனையில் முதல் கட்ட பரிசோதனை முடிந்தது. இங்கு நான்கு பேருக்கு சோதிக்கப்பட்டுள்ளது. 28 நாட்களுக்குப் பின்னர் இதன் முடிவுகள் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது. இதற்கிடையில் இரண்டாம் கட்ட பரிசோதனைக்கும் தயாராகி வருகிறது. பல்வேறு கட்டங்களில், நாள் கணக்கு அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சீரம் மனித பரிசோதனை
இதற்கிடையே இந்தியாவில் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் கண்டுபிடித்து இருக்கும் கோவிஷீல்டு தடுப்பு மருந்து மனித பரிசோதனைக்கு உட்படுத்தப்பட இருக்கிறது. இந்தப் பரிசோதனைக்கு நாடு முழுவதும் இருந்தும் 1000 பேர் எடுத்துக் கொள்ளப்படுவார்கள் என்று தெரிகிறது. இதற்கு புனேவில் இருக்கும் சீரம் இன்ஸ்டிடியூட்டுக்கு ஆக்ஸ்போர்டு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் மனித பரிசோதனை மேற்கொள்ள ஐசிஎம்ஆர் அனுமதி வழங்கியுள்ளது. இன்னும் இரண்டு வாரங்களில் இந்த பரிசோதனை துவங்கும் என்று தெரியவந்துள்ளது. இந்தியாவில் இந்த பரிசோதனை இரண்டு மற்றும் மூன்றாம் கட்டமாக செய்யப்படுகிறது. இதற்காக நாட்டில் இருக்கும் 11 முதல் 12 மருத்துவமனைகளில் சீரம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
ஸ்புட்னிக் வி
ரஷ்யாவும் ஸ்புட்னிக் வி என்ற பெயரில் கொரோனா தடுப்பு மருந்தை கொண்டு வந்துள்ளது. இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும், அதற்கு முன்னதாக இந்த மருந்து பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. இந்த மருந்தை தனது மகளே போட்டுக் கொண்டு இருப்பதாகவும், ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.