இந்தியாவில் கொத்து கொத்தாக பரவும் கொரோனா 3.15 லட்சம் பேர் பாதிப்பு - ஒரே நாளில் 2102 பேர் பலி
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 3,15,802 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் ஒரு நாள் பாதிப்பு புதிய உச்சம் தொட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,15,802 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,59,24,806 பேராக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 2102 பேர் பலியாகியுள்ளனர்.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக உலக மக்களை கொரோனா வைரஸ் தன் பிடியில் வைத்துள்ளது. 14.75 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனா இரண்டாவது அலை, மூன்றாவது அலை என அலை அலையாக வீசத் தொடங்கியுள்ளது. கொரோனாவால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மகாராஷ்டிரா, டெல்லியில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. தமிழகம், பஞ்சாப், பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் இரவு நேர லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.
3,15,802 பேர் பாதிப்பு
நாடு முழுவதும் கடந்த ஒரே நாளில் 3,15,802 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,59,24,806 பேராக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து 1,34,49,406 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவிற்கு 22,90,728 சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒரே நாளில் 2102 பேர் பலி
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒரே நாளில் 2,102 பேர் மரணமடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,84,672 பேராக அதிகரித்துள்ளது.
டாப் 10 மாநிலங்கள்
நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. டெல்லி, குஜராத், உத்தரபிரதேசம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. தினசரியும் நூற்றுக்கும் மேற்பட்டோர் மரணமடைவதால் சுடுகாடுகளில் புதைக்கவும், தகனம் செய்யவும் இடம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
53 பேர் பலி
தமிழகத்தில் நேற்று மேலும் 11,681பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 10,25,059 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 7,071 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 9,27,440 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் நேற்று மேலும் 53 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 13,258 ஆக உயர்ந்துள்ளது.
கடைசி ஆயுதம் முழு முடக்கம்
கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவது மக்கள் கைகளில்தான் உள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். கடந்த ஜனவரி 16 முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 13 கோடி தடுப்பூசிகள் நாடு முழுவதும் போடப்பட்டுள்ளன. வரும் மே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முழு முடக்கத்தை கடைசி ஆயுதமாக பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். தினசரியும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படுவதால் கடந்த ஆண்டைப்போல மீண்டும் முழு முடக்கம் அமலாகுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.