மறுபடியும் முதலிலிருந்தா.. இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. கடவுள் தான் காப்பாத்தணும்
டெல்லி: இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா, கேரளா, சத்தீஸ்கர், பஞ்சாப் மற்றும் மத்திய பிரதேசத்தில் கொரோனா தொற்று அதிகரித்ததைத் தொடர்ந்து, இந்தியாவில் கோவிட் -19 பாதிப்புகளின் எண்ணிக்கை ஐந்தாவது நாளாக உயர்ந்து காணப்படுகிறது. மத்திய சுகாதார அமைச்சகத்தின்படி, 17 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு நேற்று(பிப்.22) சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1.5 லட்சத்தை கடந்தன என்றும், நாட்டில் மொத்த பாதிப்பு 1.10 கோடியைத் தாண்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சிகிச்சையில் உள்ளவர்களில 74 சதவிகிதம் கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்தவர்களே.
அதிக அளவில் கொரோனா பாதிப்புகளைக் கொண்ட மகாராஷ்டிராவில், திங்களன்று 5,210 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. பிப்ரவரி 8 முதல் செயலில் உள்ள கோவிட் -19 பாதிப்புகளில் 36.38 சதவீதம் மும்பையில் உயர்ந்துள்ளது. அங்கு, தொடர்ச்சியாக இரண்டு நாட்களுக்கு தினமும் 900 க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் பதிவான நிலையில், நேற்று 760 புதிய பாதிப்புகள் ரெஜிஸ்டர் செய்யப்பட்டுள்ளது.
கோவிட் -19 இன் பரவலை தடுக்கும் வகையில், மகாராஷ்டிராவிலிருந்து வரும் மக்கள் வெப்ப பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று மத்தியப்பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்கள் தெரிவித்துள்ளன. அதிகரித்து வரும் கோவிட் -19 பாதிப்புகளை கருத்தில் கொண்டு, திங்கட்கிழமை முதல் மாநிலத்தில் மத, சமூக மற்றும் அரசியல் கூட்டங்கள் தடை செய்யப்படும் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.
கர்நாடகாவில், COVID நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் அலட்சியம் காட்டினால், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் கே.சுதாகர் எச்சரித்துள்ளார். திருமணங்களை கண்காணிக்க காவலர்கள் நிறுத்தப்படுவார்கள் என்றும் மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து வரும் நபர்கள் 72 மணி நேரத்திற்கு மிகாமல் இருக்கக்கூடிய கோவிட்-19 நெகடிவ் சான்று வைத்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.