கொரோனா குணமானாலும்… நோயாளிகளிடம் அதிகரிக்கும் காதுகேளாமை.. அச்சத்தை ஏற்படுத்திய பகீர் புள்ளிவிவரம்!
டெல்லி: கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு அதிலிருந்து குணமடைந்த பின்னரும், செவித்திறன் குறைபாடு ஏற்படுவதாக டெல்லி மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா 2ஆம் அலை உச்சத்திலிருந்தது. கொரோனா பாதிப்பும் சரி, உயிரிழப்புகளும் சரி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மோசமாக இருந்தது,
கொரோனா முதல் அலையைக் காட்டிலும் 2ஆம் அலையில் கொரோனா அறிகுறிகளும் சரி பாதிப்புகளும் சரி வித்தியாசமாகவே இருந்தது.
கொரோனா அறிகுறி
முதல் அலையில் முதியவர்களுக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்பட்டது. ஆனால், இந்த முறை குடும்பத்தில் இருக்கும் முதியவர்கள் முதல் சிறார்கள் வரை அனைவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதேபோல முதல் அலையில் காய்ச்சலே கொரோனாவில் முக்கிய அறிகுறியாக இருந்தது. ஆனால், இந்த முறை வயிற்றுப் போக்கு, உடல் வலி ஆகியவையே முக்கிய அறிகுறிகளாக உள்ளன.
டெல்லி மருத்துவர்
இந்தச் சூழ்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு அதிலிருந்து குணமடைந்த பின்னரும், செவித்திறன் குறைபாடு ஏற்படுவதாக டெல்லி மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தலைநகர் டெல்லியைச் சேர்ந்த சவுரப் நாராயண் என்ற மருத்துவர் கடந்த ஆண்டு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் 21 நாட்கள் ஐசியு பிரிவில் சிகிச்சை பெற்றார். தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவர் கொரோனாவி்ல இருந்து குணமடைந்தார்.
செவித்திறன் பாதிப்பு
ஆனால், அதன் பிறகு அவரது செவித்திறன் குறைந்துள்ளதை அவர் உணர்ந்தார். ஆனால், இதை அவர் தாமதமாகப் புரிந்து கொண்டார். இதனால் hearing aid இல்லாமல் அவருக்குச் சிகிச்சை அளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது hearing aid இல்லாமல் அவரால் முன்பு போலக் கேட்க முடியாது. குறிப்பாக, வலது காதில் செவித்திறனை அவர் முற்றிலுமாக இழந்துள்ளார்.
15 பேருக்குப் பாதிப்பு
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 15 பேர் தங்களுக்குச் செவித்திறன் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக டெல்லியிலுள்ள அம்பேத்கர் மருத்துவமனை தெரிவித்துள்ளது. அந்த 15 பேருக்கும் காதுகளில் வலியும் செவித்திறன் குறைபாடும் ஏற்பட்டுள்ளது. இந்த 15 பேரும் கொரோனாவில் இருந்து சமீபத்தில் தான் குணமடைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இவர்கள் அனைவரும் தாமதமாகவே மருத்துவமனைகளுக்கு வந்துள்ளதால் அவர்களைக் குணமாக்க முடியாத சூழ்நிலை உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
72 மணி நேரம்
இது குறித்து அம்பேத்கர் மருத்துவமனையில் ENT சிறப்பு மருத்துவராக உள்ள டாக்டர் பங்கஜ் குமார் கூறுகையில், காதில் வலி இருந்தாலும் செவித்திறனில் குறைபாடு உள்ளதைப் போல உணர்ந்தாலும் அடுத்த 72 மணி நேரத்திற்குள் மருத்துவரைச் சந்திக்க வேண்டும். ஆரம்பக் கட்டங்களில், செவித்திறன் இழப்பை மருந்துகள் மூலம் சிகிச்சை அளித்துக் குணப்படுத்த முடியும். ஆனால் தாமதமாக வரும் நோயாளிகளுக்கு இது சாத்தியம் இல்லை" என்றார்.
குடலிறக்கம் ஆபத்து
கொரோனா 2ஆம் அலையில் நோயாளிகளுக்கு வயிற்று வலி, குமட்டல், வாந்தி, பசியின்மை மற்றும் மூட்டு வலி ஆகியவை அதிகம் ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இன்னும் சில நோயாளிகள் ரத்த உறைதல் பிரச்சினைகளும் ஏற்படுவதாகவும், இதனால் திசுக்கள் பாதிக்கப்பட்டு குடலிறக்கம் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு கொரோனா நோயாளிகள் மத்தியில் மேற்கூறிய பாதிப்புகள் அதிகமாக உள்ளது.