திட்டப்படி நடந்தால்.. 3-4 மாதங்களில் இந்தியாவிற்கு கொரோனா வேக்சின் கிடைக்கும்.. சீரம் நிறுவனம்!
டெல்லி: எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால் இன்னும் 3-4 மாதங்களில் கொரோனா தடுப்பு மருந்து இந்தியர்களுக்கு கிடைக்கும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் சிஇஓ அடர் பொன்வல்லா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசுக்கு எதிராக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்டெராசெனெகா (AstraZeneca) நிறுவனம் இணைந்து தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளது.கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்துகளில் ஆஸ்டெராசெனெகா மருந்து அதிக நம்பிக்கை அளித்துள்ளது.
இந்த தடுப்பு மருந்தை தயார் செய்யவும், சோதனை செய்யவும் ஆஸ்டெராசெனெகா நிறுவனம் சீரம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. உலகிலேயே சீரம் நிறுவனம்தான் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் ஆகும்.
"ஒத்துழைப்பு வேண்டும்".. கொரோனா வேக்சினுக்காக சமாதானத்திற்கு முயலும் சீனா.. கெத்து காட்டும் இந்தியா!
பேட்டி
இந்த நிலையில் எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால் இன்னும் 3-4 மாதங்களில் கொரோனா தடுப்பு மருந்து இந்தியர்களுக்கு கிடைக்கும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் சிஇஓ அடர் பொன்வல்லா தெரிவித்துள்ளார். தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தற்போது வேக்சின் உற்பத்தி வேகமாக நடந்து வருகிறது. டிசம்பர் மாதத்திற்குள் வேக்சின் கிடைக்க வாய்ப்பு இல்லை.
திட்டம்
எல்லாம் திட்டப்படி நடந்தால் அடுத்த வரும் பிப்ரவரி மாதத்திற்குள் வேக்சின் கிடைத்துவிடும். பின் மார்ச், ஏப்ரல் மாதங்களில் மக்களுக்கு வேக்சின் கொடுக்க முடியும். வயதானவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள், முன்கள பணியாளர்கள் ஆகியோருக்கு வேக்சின் கொடுக்க முடியும். ஆனால் இதற்கு எல்லாம் திட்டமிட்டபடி நடக்க வேண்டும்.
முக்கியம்
ஆஸ்டெராசெனெகா மருந்துக்கு பிரிட்டனில் அனுமதி அளிக்க வேண்டும். அதன்பின் இந்தியாவில் அனுமதி பெற வேண்டும். அதன்பின்பே மக்கள் பயன்பாட்டிற்கு வரும். இதில் 50% மருந்து இந்தியர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. குறைந்த பட்ச விலையாக 500-600 ரூபாயில் இந்த மருந்து கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். ஆனால் எல்லா இந்தியர்களுக்கும் இப்போது மருந்து கிடைக்காது.
எப்போது
பிப்ரவரி வரை 100 மில்லியன் மருந்துகளை தயார் செய்வோம். எப்படியும் மொத்தமாக மருந்துகளை எல்லா இந்தியர்களுக்கும் கொண்டு சேர்க்க 2-3 வருடம் ஆகும். உற்பத்தி, நேரம், செலவு, தொழில்நுட்பம் என்று பல விஷயங்கள் உள்ளது. எல்லா இந்தியருக்கு வேக்சின் சென்று சேர்வதற்கு 2-3 வருடம் ஆகும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் சிஇஓ அடர் பொன்வல்லா தெரிவித்துள்ளார்.