இந்தியாவில் இதுவரை இல்லாத புதிய உச்சம்.. ஒரே நாளில் 22 ஆயிரம் பேருக்கு கொரோனா
டெல்லி: இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் சுமார் 22 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,27,168 ஆக உயர்ந்தது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவும் வேகம் நாளுக்கு நாள் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. ஆனால் அதேநேரம் குணம் அடைவோர் விகிதமும் அதிகமாக உள்ளது. உயிரிழப்பும் மிக குறைவாகவே உள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 21,948 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 6,27,168 ஆக உயர்ந்து உள்ளது.
இதுவரை இல்லாத உச்சம்.. ஒரே நாளில் தமிழகத்தில் 4343 பேருக்கு கொரோனா.. 1 லட்சத்தை நெருங்குகிறது!
அதிகரிக்கும் மாற்றம்
ஆனால் கொரோனா ஒருபக்கம் கடுமையாக அதிகரித்தாலும் மறுபக்கம் குணம் அடைவோர் எண்ணிக்கையும் படுவேகமாகஅதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் 3,79,902 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது தொற்று பாதிப்புடன் 2,28,975 பேர் இந்தியா முழுவதும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கொரோனாவால் பலி
இதுவரை கொரோனா தொற்றால் நாட்டில் 18225 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் பெரும்பாலானோர் 50 வயதை கடந்தவர்கள் ஆவர். குறிப்பாக பலருக்கு சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், சிறுநீரக பாதிப்பு, ஆஸ்துமா, போன்ற நாள் பட்ட வியாதிகள் உடையவர்கள் ஆவர். அதேநேரம் இளம் வயதினரும் , எந்த நோய் அறிகுறிகள் இல்லாதவர்களும் கொரோனாவின் தீவிரத்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர்.
6328 பேர் பாதிப்பு
இந்தியாவில் கொரோனா தொற்றால் மகாராஷ்டிரா மாநிலம் தான் மோசமாக பாதிக்கப்பட்டு முதல்இடத்தை பிடித்துள்ளது. அங்கு இதுவரை 1,86,626 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரு நாளில் மட்டும் 6328 பேர் பாதிக்கப்பட்டனர். இதுவரை மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றால் 8,178 பேர் உயிரிழந்துள்ளனர்.
குணம் அடையும் விகிதம்
இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள தமிழகத்தில் 98,392 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரு நாளில் மட்டும் 4343 பேர் புதிதாக தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். கொரோனாவில் இருந்து தமிழகத்தில் இதுவரை 56021 பேர் மீண்டுள்ளனர். 41050 பேர் நோய் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா உயிரிழப்பு தமிழகத்தில் மிக மிக குறைந்த அளவில் உள்ளது. மொத்தம் இதுவரை பாதிக்கப்பட்ட 98,392 பேரில் 1321 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். தமிழகத்தை தொடர்ந்து டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரப்பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்கள் அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளன.