லாக்டவுன்.. மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் ரத்தம் தானம் கிடைக்காமல் தலசீமியா நோயாளிகள் அவதி
டெல்லி: இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தலசீமியா நோயாளிகளுக்கு ரத்தம் தானம் செய்பவர்கள் கிடைக்காததாலும் அவர்களால் சிகிச்சைக்கும் தெரபி எடுப்பதற்கும் மருத்துவமனைக்கு செல்ல முடியாததாலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் வீட்டை விட்டு யாரும் செல்ல முடியாத நிலை உள்ளது.
மேலும் பேருந்துகள், ரயில்கள் , விமானங்களின் இயக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் தலசீமியா நோயாளிகளால் மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாத சூழல் உள்ளது. தலசீமியா என்பது ஒரு மரபு சார்ந்த நோயாகும். இது ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினின் உற்பத்தியை குறைத்துவிடும். இது கிட்டத்தட்ட அனிமீயா எனப்படும் ரத்தசோகை நோய் போன்றதாகும்.
இரு யூனிட்கள் ரத்தம்
இதுகுறித்து தலசீமியா நோயாளிகள் கூறுகையில் ஒவ்வொரு இரு வாரங்களுக்கு ஒரு முறையும் இரு யூனிட்கள் ரத்தம் எனக்கு செலுத்தப்பட வேண்டும். இதை நான் லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். தற்போது இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் என்னால் லக்னோவுக்கு பயணம் மேற்கொள்வதில் சிரமம் இருக்கிறது. அது போல் ரத்தம் தானம் அளிப்பவர்கள் கிடைப்பதிலும் பிரச்சினை நிலவுகிறது என்றார்.
கிராமம்
புதிய ரத்தம் ஏற்றப்பட வேண்டிய தலசீமியா நோயாளிகளில் சிலர் உடலில் தங்கியுள்ள தேவைக்கு அதிகமான இரும்புச் சத்துகளை வெளியேற்றும் சிகிச்சையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து இன்னொரு நோயாளி கூறுகையில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பஸ்தியில் உள்ள கிராமத்தில் வசித்து வருகிறேன். எங்கள் கிராமத்திலிருந்து லக்னோ செல்ல 200 கி.மீ. தூரம் பயணம் செல்ல வேண்டியுள்ளது. தன்னால் மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. இதே போன்று ஊரடங்கு தொடர்ந்தால் நான் எப்படி உயிர்வாழ்வது என தெரியவில்லை என்றார்.
10 ஆயிரம்
இதுகுறித்து மற்றொரு நோயாளியின் தாய் கூறுகையில் ரத்த மாற்றத்திற்கு எனக்கு போதிய பணம் இல்லாததால் மும்பையில் ஒரு மருத்துவமனையில் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளித்து வருகிறோம். ஆனால் இப்போது ரயில்கள் ஓடாததால் எங்கும் செல்ல முடியாமல் உள்ளோம் என்றார். உலகிலேயே தலசீமியா நோயாளிகள் அதிகம் இருக்கும் நாடாக இந்தியா விளங்குகிறது. ஆண்டுதோறும் இந்த பிரச்சினையுடன் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறக்கின்றனர்.
ரத்தம் தேவை
இந்த நோய் பெற்றோரிடம் இருந்து குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. அதாவது பெற்றோருக்கு தலசீமியா நோய் இருந்தால் அது மரபு நோயாவதால் அவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகளுக்கும் ஏற்படுகிறது. நம் நாட்டில் 3.5 கோடி பேர் இந்த நோய்க்கு ஆளாகியுள்ளனர். மாதந்தோறும் ஒரு லட்சம் பேர் ரத்த மாற்றுச் சிகிச்சையை பெறுகிறார்கள். இதற்காக இந்தியாவில் தலசீமியா நோயாளிகளுக்கு 2 லட்சம் யூனிட்டுகளுக்கு மேற்பட்ட ரத்தம் தேவைப்படுகிறது. போக்குவரத்து ஒரு புறமிருந்தாலும் ரத்த தானம் செய்பவர்கள் வெளியே வரமுடியாமல் தவிக்கின்றனர்.
வீடுகளுக்கு
எனவே இதுகுறித்து சமூகவலைதளங்களில் பதிவுகளை போட்டுள்ளோம். அதில் ரத்த தானம் செய்வோர் உதவிக்கு வரும்படி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் இருந்தது. இதையடுத்து மனிதநேயமிக்க நிறுவனங்கள் வீடுகளுக்கே சென்று ரத்தத்தை சேகரிக்க சமூகவலைதளங்களில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.