லாக்டவுன் காலத்தில் 1 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் கால்நடையாக சொந்த ஊர் திரும்பினர்- மத்திய அமைச்சர்
லாக்டவுன் காலத்தில் நடந்து சென்றவர்கள் உட்பட 1.06 கோடிக்கும் அதிகமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பியுள்ளதாக கூறியுள்ளார்.
டெல்லி: நாட்டில் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட மார்ச் முதல் ஜூன் வரையிலான கால கட்டத்தில் சுமார் 1 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பியுள்ளதாக லோக்சபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணையமைச்சா் வி.கே.சிங் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளார்.
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அளித்துள்ள தரவுகளின்படி, லாக்டவுன் காலத்தில் நடந்து சென்றவர்கள் உட்பட 1.06 கோடிக்கும் அதிகமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பியுள்ளதாக கூறியுள்ளார்.
தற்காலிகமாக கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, மார்ச்-ஜூன் மாதங்களில் 29,415 உயிரிழப்புகளுடன் 81,385 விபத்துக்கள் சாலைகளில் நிகழ்ந்துள்ளதாகவும் வி.கே சிங் லோக்சபாவில் தெரிவித்தார்.
லாக்டவுன் காலத்தில் சாலை விபத்துக்களில் இறந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பாக அமைச்சகம் தனித்தனி தரவுகளை பராமரிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
சொந்த மாநிலங்களுக்கு திரும்பி குடியேறிய தொழிலாளர்களுக்கு தங்குமிடம், உணவு, நீர், சுகாதார வசதிகள் மற்றும் முறையான ஆலோசனைகளை வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க உள்துறை அமைச்சகம் மாநில / யூனியன் பிரதேசங்களுக்கு வழக்கமான ஆலோசனைகளை அளித்துள்ளது.
"நாடு முழுவதும் உள்ள பல்வேறு தேசிய நெடுஞ்சாலைகளில் கால்நடையாக நடந்து செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு, குடிநீர், அடிப்படை மருந்துகள் மற்றும் மிதியடிகள் ஆகியவற்றை வழங்குவதன் மூலம் இந்த அமைச்சகம் உதவியது," என்று அவர் கூறினார்.
70 நாட்களில் 2ஜி வழக்கு விசாரணை- தமிழகத்தில் 2 லோக்சபா தொகுதிக்கு இடைத்தேர்தல்.. ஹெச். ராஜா ஆரூடம்
உள்ளூர் நிர்வாகத்தின் உதவியுடன் போக்குவரத்து வசதி செய்யப்பட்டு அவர்களின் சொந்த ஊர்களுக்கு அருகிலுள்ள இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறியுள்ளார் அமைச்சர் வி.கே சிங். சிறப்பு ரயில்கள், சிறப்பு பேருந்துகள் மூலமும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.