தடுப்பூசி போட்ட 580 பேருக்கு ஒவ்வாமை... 7 பேர் மருத்துவமனையில் அனுமதி.. மத்திய அரசு தகவல்!
டெல்லி: கொரோனா தடுப்பூசி போட்ட 580 பேருக்கு சிறு ஒவ்வாமை ஏற்பட்டதாகவும், மேலும் 7 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் 16-ம் தேதி முதல் நேற்று வரை மொத்தம் 3.8 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.
தடுப்பூசி போட்ட 2 பேர் உயிரிழந்தனர். அவர்களின் இறப்புக்கும், தடுப்பூசிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.
தயக்கம், குழப்பம்.. கொரோனா தடுப்பூசி பெறுவோர் தமிழகத்தில் ரொம்ப கம்மி.. நாட்டிலேயே கர்நாடகா டாப்!
கொரோனா தடுப்பூசி
நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 16-ம் தேதி தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக சுகாதார, மருத்துவ, முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
முதல் நாளில் 21,291 பேர்
இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் என 2 தடுப்பூசிகள் போடப்படுகின்றன. நாடு முழுவதும் முதல் நாளில் 191,181 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி போட்ட பலருக்கு சிறு, சிறு ஒவ்வாமைகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று மூன்றாவது நாளாக நாடு முழுவதும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்தது.
580 பேருக்கு ஒவ்வாமை
இந்தியா முழுவதும் 16-ம் தேதி முதல் நேற்று வரை மொத்தம் 3.8 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை தடுப்பூசி போடப்பட்ட 3,81,305 சுகாதாரப் பணியாளர்களில் 1,48,266 பேருக்கு மட்டும் திங்கள்கிழமை தடுப்பூசி வழங்கப்பட்டது .இதில் 580 பேருக்கு சிறு ஒவ்வாமைகள் ஏற்பட்டதாகவும், மேலும், 7 பேர் உடல் உபாதைகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது. இதற்கிடையே தடுப்பூசி போட்ட 2 பேர் உயிரிழந்தனர். ஆனால் அவர்கள் இறப்புக்கு தடுப்பூசி காரணம் இல்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இரண்டு பேர் உயிரிழப்பு
உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் அரசு மருத்துவமனையில் வார்டில் பணிபுரியும் மஹிபால் சிங்(46) தடுப்பூசி போட்ட 24 மணி நேரத்திற்கு பிறகு இறந்தார். அவரது மரணம் தடுப்பூசிக்கு தொடர்பில்லாதது என்று மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார். பிரேத பரிசோதனை அறிக்கையின்படி "கார்டியோ-நுரையீரல் நோய்" காரணமாக அவர் உயிரிழந்தார் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. மஹிபால் சிங் தடுப்பூசி போடுவதற்கு முன்பு உடல்நிலை சரியிலலாமல் இருந்ததாக அவரது குடும்பத்தினர் கூறினர்.
மாரடைப்புதான் காரணம்
கர்நாடகாவின் பெல்லாரியை சேர்ந்த 43 வயதான நாகராஜு சனிக்கிழமை தடுப்பூசி போட்ட பின்னர் உயிரிழந்தார். ஆனால் அவர் மாரடைப்பு காரணமாக இறந்ததாக அந்த மாநில அரசு கூறியது. பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் வரவில்லை என்றும் வந்தபிறகு அது தெரியவரும் என்றும் அரசு கூறியுள்ளது.இது தொடர்பாக கர்நாடக சுகாதார அமைச்சர் கே.சுதாகர் கூறுகையில், தடுப்பூசி காரணமாக அந்த நபருக்கு மாரடைப்பு ஏற்படவில்லை. அவருக்கு வழக்கமாக ஏற்படும் மாரடைப்பே ஏற்பட்டது. அவருக்கு நீரிழிவு நோயும் இருந்தது என்று அவர் கூறினார்.
7 பேருக்கு தீவிர கண்காணிப்பு
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஏழு பேரில், மூன்று பேர் டெல்லியைச் சேர்ந்தவர்கள். அதில் இரண்டு பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர், ஒருவர் டெல்லி மேக்ஸ் மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளார். கர்நாடகாவில் 2 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர். உத்தரகண்டில், ரிஷிகேஷில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் ஒருவர் கண்காணிப்பில் உள்ளார். மற்றொருவர் சத்தீஸ்கரின் ராஜநந்த்கானில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.