6 நாட்களில் 10 லட்சம் பேருக்கு கோவிட் தடுப்பூசி - உலகின் 'நம்பர்.1' நாடாக இந்தியா
டெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி திட்டத்தின் கீழ், இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கோவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இதர முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய தடுப்பூசி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. உலக நாடுகள் மத்தியில் தடுப்பூசிகள் அதிகம் போடுவதில் இந்தியா தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது.
ஜனவரி 16 முதல் இந்தியாவில் இரண்டு டோஸ் தடுப்பூசியைப் பெற்றவர்களின் எண்ணிக்கை "பல நாடுகளை விட அதிகமாக உள்ளது" என்று சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசித் திட்டத்தின் கீழ், ஜனவரி 22 காலை 7 மணி வரை சுமார் 10.5 லட்சம் பேருக்கு (10,43,534) தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 4,049 இடங்களில் 2,37,050 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் கோவிட் தடுப்பூசிப் போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் தாண்டிவிட்டது. தமிழ்நாட்டில் எண்ணிக்கை 42,947.
கொரோனா பரிசோதனையின் மொத்த எண்ணிக்கை 19 கோடியைக் (19,01,48,024) கடந்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 8,00,242 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் 18,002 பேர் குணமடைந்துள்ளதாகவும், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,02,83,708-ஆகவும் உள்ளது. குணமடைந்தவர்களுக்கும், சிகிச்சை பெறுபவர்களுக்குமான இடைவெளி 1,00,95,020 (54.5 மடங்கு)-ஆக உள்ளது. குணமடைந்தோர் வீதம் 96.78 சதவீதமாக இருக்கிறது.
ஜூலை 1 ஆம் தேதிக்குள் முடிக்கப்படவுள்ள முதல் கட்ட கொரோனா தடுப்பூசி போடும் படலத்தில், ஒரு கோடி சுகாதார ஊழியர்கள் மற்றும் 2 கோடி முன்கள பணியாளர்கள் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.