சீரம் நிறுவனத்திடம் இருந்து 1 கோடி கோவிஷீல்டு மருந்துகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்பந்தம்
சீரம் நிறுவனத்திடம் இருந்து 1 கோடி கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ஜனவரி 16 முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
டெல்லி: இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டிற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசியை ஒரு டோஸ் 200 ரூபாய் என்ற விலையில் ஒரு கோடி தடுப்பூசி மருந்துகள் சீரம் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் கொரோனா வைரஸ் ஒரு கோடி பேருக்கும் தாக்கிய நிலையில் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மக்கள் தடுப்பூசி எதுவும் போடமலேயே குணமடைந்துள்ளனர். பல ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினசரியும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சிலுடன் இணைந்து கோவேக்சின் என்ற தடுப்பூசியை உருவாக்கியது. இதைப்போல இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கிய தடுப்பூசியை, உலகின் மிகப்பெரிய மருந்து நிறுவனமான புனேயை சேர்ந்த சீரம் மருந்து நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்துள்ளது.
இந்த 2 நிறுவனங்களும் மேற்படி தடுப்பூசிகளை இந்தியாவில் பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு உட்படுத்தின. இதில் நல்ல பலன்கள் விளைந்ததை தொடர்ந்து அவற்றை அவசர பயன்பாட்டுக்கு பயன்படுத்திக்கொள்ள இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி வி.ஜி.சோமானி கடந்த 3ஆம் தேதி அனுமதி அளித்தார்.
இதைத்தொடர்ந்து எந்த நேரத்திலும் நாடு முழுவதும் தடுப்பூசி வினியோகம் தொடங்கலாம் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டிருந்தது. இதை உறுதி செய்யும் வகையில், பிரதமர் மோடியும் உலகிலேயே மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் தொடங்குவதற்கு தயாராக இருக்கிறோம் என அறிவித்து இருந்தார்.
கொரோனா தடுப்பூசி.. யாருக்கு முதலில் செலுத்தப்படும்? எப்படி பதிவு செய்வது? முழு விளக்கம் இதோ
உலக நாடுகளில் கொரோனா இரண்டாம் அலை பரவி வருகிறது. இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகளுக்கு மத்திய அரசு அளிக்கப்பட்டதை அடுத்து வரும் 16ம் தேதி முதல் தடுப்பூசிகள் போடப்பட உள்ளன. முதலில் முன்களப் பணியாளர்களுக்கும், 50 வயதுக்கு மேற்பட்டோருக்கும், 50 வயதுக்கு உட்பட்ட இணை நோய் இருப்பவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பேசிய சீரம் நிறுவன தலைமை செயல் அதிகாரி அடார் பூனவல்லா, மத்திய அரசுடன் 40 கோடி தடுப்பூசிகளுக்கான ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளதாகவும், முதல் 10 கோடி தடுப்பூசிகள் 200 ரூபாய் எனும் சிறப்பு விலையில வழங்கப்படும் என்றும் கூறினார்.
இந்த நிலையில் சீரம் நிறுவனத்திடம் இருந்து 1 கோடி கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் 16ஆம் தேதி முதல் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தொடங்கும் நிலையில் 1 டோஸ் 200 ரூபாய்க்கு 1 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.