இந்தியாவில் ஜனவரி 13முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் - மத்திய அரசு அறிவிப்பு
நாடு முழுவதும் வரும் 13ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள்,கொரோனா முன்கள பணியாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
டெல்லி: இந்தியாவில் வரும் 13ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது.
Recommended Video
கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் எட்டரை கோடி மக்களை பாதித்துள்ளது. அமெரிக்காவில் 2 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 1 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் 6 கோடி பேர் வரை கொரோனாவில் இருந்து குணமடைந்திருந்தாலும் 20 லட்சம் பேர் வரை மரணமடைந்துள்ளனர். 2 கோடிக்கும் மேற்பட்டோர் உலகம் முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவும் தடுக்கவும் மருந்து கண்டுபிடிக்க பல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு உள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் தடுப்பூசி அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் மருந்தக நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா மற்றும் பாரத் பயோடெக் ஆகியோரால் உருவாக்கப்பட்ட 'கோவிஷீல்ட்' தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்கிறது சீரம் நிறுவனம். இதேபோல பாரத்பயோடெக் நிறுவனம், தங்களின் 'கோவாக்சின்' தடுப்பூசியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உடன் கூட்டு சேர்ந்து உருவாக்கியுள்ளது.
கொரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுப்பூசிகளான கோவிஷீல்டு, கோவாக்சினுக்கு அவசரகால பயன்பாட்டு அனுமதி வழங்குவதாக இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்
நாடு முழுவதும் கடந்த வாரம் கொரோனா தடுப்பூசி ஒத்திகை கடந்த வாரம் நடைபெற்றது. இந்த நிலையில் வரும் 13ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கும், சுகாதாரத்துறையினருக்கும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
சென்னை, கொல்கத்தா, மும்பை,உள்ளிட்ட நான்கு இடங்களில் கொரோனா தடுப்பூசியை இருப்பு வைக்கும் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 2021 ஆம் ஆண்டு கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போது தடுப்பூசி செலுத்தப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தாலும் மக்கள் கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மொதல்ல "மத்திய அமைச்சர்கள்" தடுப்பூசி போட்டுக்கலாமே.. சு. வெங்கடேசன் அதிரடி!