ஒரு குப்பியில் 10 தடுப்பூசி... 4 மணி நேரத்தில் யூஸ் செய்யவில்லை என்றால் அத்தனையும் வேஸ்ட்
டெல்லி: இந்தியாவில் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசி வழங்கும் பணிகள் வரும் ஜனவரி 16ஆம் தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே ஒரு சில மாநிலங்களைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் கொரோனா பரவல் மெல்லக் குறைந்து வருகிறது.
இருப்பினும், அமெரிக்கா, பிரிட்டன், பிரேசில் போன்ற நாடுகளிலும் இதேபோலத் தான் சில மாதங்களுக்குக் குறைந்திருந்த கொரோனா பரவல் மீண்டும் தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதேநிலை இந்தியாவிலும் ஏற்படாமல் இருக்கத் தடுப்பூசி வழங்கும் பணிகள் வரும் ஜனவரி 16ஆம் தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி
இதற்காக சீரம் மற்றும் பாரத் பயோடெக் ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. தடுப்பூசி வழங்கும் பணிகளை மேற்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு தற்போது எடுத்து வருகிறது. தடுப்பூசி வழங்கும் இடங்களை அடையாளம் காணுவது, சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் குறித்து தகவல்கள் சேகரிப்பது உள்ளிட்ட பணிகளில் தற்போது மாநில அரசுகள் தற்போது ஈடுபட்டுள்ளது.
சீரம் தடுப்பூசி
சீரம் நிறுவனத்தின் தடுப்பூசி கொரோனா தடுப்பூசிகளே பொதுமக்களுக்கு அளிக்கப்படவுள்ளது. மகாராஷ்டிராவின் புனேவில் தற்போது கோவிஷீல்டு தடுப்பூசி உள்ளது. அவை இன்று முதல் நாடு முழுவதும் விநியோகிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவிர்க்க முடியாத சில காரணங்களால் இன்று கோவிஷீல்டு விநியோகம் தொடங்கப்படவில்லை என்றாலும் கூட, நாளை தடுப்பூசி விநியோகம் நிச்சயம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக நாடு முழுவதும் உள்ள அரசின் 48 சேமிப்பு இடங்களுக்குத் தடுப்பூசி எடுத்துச் செல்லப்படவுள்ளது.
நான்கு மணி நேரத்தில் பயன்படுத்த வேண்டும்
ஒவ்வொரு கோவிஷீல்டு குப்பியிலும் 10 தடுப்பு மருந்துகள் இருக்கும். குப்பி திறக்கப்பட்டத்திலிருந்து நான்கு மணி நேரத்தில், அனைத்து 10 தடுப்பூசிகளும் பயன்படுத்தப்பட வேண்டும். இல்லையென்றால் அவை அனைத்தும் பயனற்றதாக மாறிவிடும்.
காரணம் என்ன
யுனிவர்சல் நோய்த்தடுப்பு திட்டத்தின் (யுஐபி) கீழ் வழங்கப்படும் சில தடுப்பூசிகளைக் குப்பி திறக்கப்படும், சுமார் நான்கு வாரங்கள் வரை பயன்படுத்தலாம். ஆனால் இதற்கு வி.வி.எம் எனப்படும் தடுப்பூசி குப்பியைக் கண்காணிக்கும் சாதனம் தேவை. ஆனால், தற்போது மிக விரைவில் தடுப்பூசி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு விரும்புவதால், சேமித்து வைத்துப் பயன்படுத்தும் கொள்கைக்கு மத்திய அரசு அனுமதியளிக்கவில்லை,
அரசு உத்தரவு
வி.வி.எம் இல்லாமல் தடுப்பூசியை நான்கு மணி நேரத்திற்கு மேல் சேமித்து வைக்க முடியாது. எனவே, நான்கு மணி நேரத்திற்குள், குப்பியில் இருக்கும் அனைத்து கொரோனா தடுப்பூசிகளையும் பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் எல்லாம் பயனற்றதாக மாறிவிடும். எனவே, ஒவ்வொரு குப்பியும் திறக்கப்பட்ட தேதி மற்றும் நேரத்தைத் தடுப்பூசி வழங்கும் நபர், அதில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கோவாக்சின் தடுப்பூசி
சீரம் தடுப்பூசியுடன் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிக்கும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. கோவாக்சின் தடுப்பூசி செயல்படாத வைரஸ்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதால், அந்த வகை தடுப்பூசியைச் சேமித்துப் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோ-வின் செயலி
மத்திய அரசின் மற்ற தடுப்பூசி வழங்கும் திட்டங்களைப் போல ஒருவர் விரும் நேரத்திற்கு விரும்பும் இடத்திற்குச் சென்று கொரோனா தடுப்பூசியைப் பெற முடியாது. கோ-வின் என்ற மொபைல் செயலியைப் பயன்படுத்தி மத்திய அரசு கொரோனா தடுப்பூசி பணிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி பெற விருப்பம் உடையவர்கள், இதில் சென்று தங்களை முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். அதைத் தொடர்ந்து, தடுப்பூசி வழங்கும் இடம் மற்றும் தேதி இதில் தெரிவிக்கப்படும். அதைப் பின்பற்றி பொதுமக்கள் கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம்.