மோசமாக பாதித்த கொரோனா நோயாளிகளின் உடலில்... வைரஸ் 90 நாட்களுக்கு இருக்குமாம்!!
டெல்லி: கொரோனா ஒருவரை மோசமாக பாதித்து இருந்தால் அவரது உடலில் 90 நாட்களுக்கு அந்த வைரஸ் இருக்கும் என்றும் அது மற்றவர்களுக்கும் பரவும் வீரியம் கொண்டது என்றும் சமீபத்திய அமெரிக்க ஆய்வுகளில் தெரிய வந்து இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
எனவேதான், கொரோனாவில் இருந்து மீண்டவர்களை தனிமைப்படுத்த வேண்டும். அவர்களை மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் அட்லாண்டாவில் இருக்கும் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் நடத்தி இருக்கும் ஆய்வில் இந்த முடிவுகள் வெளியாகி இருக்கிறது. லேசான தொற்று ஏற்பட்டு இருந்தால் பத்து நாட்களில் குணமடைந்து விடும். மிதமான தொற்று ஏற்பட்டு இருந்தால் இருபது நாட்களில் குணமடைந்து விடும். ஆனால், மோசமாக பாதிக்கப்பட்டவரிடம் இருந்து 90.15 நிமிடங்களில் இந்த தொற்று மற்றவர்களுக்கு பரவும் என்றும் அவர்களது உடலில் 90 நாட்களுக்கு இந்த வைரஸ் இருக்கும் என்பதும் தெரிய வந்துள்ளது.
இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 12 வயதுக்கு மேற்பட்டவர்களிடம்தான் அதிகமான உயிரிழப்பு இருக்கும். ஆதலால், மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது மிகவும் முக்கியம் என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. மோசமாக பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்துதான் அதிகமாக பரவும். எனவே அதிகமாக இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் 90 நாட்களுக்கு வெளியே வரக்கூடாது. தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
உலகளவில் கொரோனாவால் 3.41 கோடி பேர் பாதிப்பு.. பலி எண்ணிக்கை 10.18 லட்சம்!
இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறதா என்பது குறித்து தொடர்ந்து பிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும் என்று கேர் மருத்துவமனை மூத்த தொற்று நோய் மருத்துவர் முஸ்தபா அப்சல் தெரிவித்துள்ளார். மருத்துவத்துறையில் பாதிக்கப்பட்டு இருப்பவர்களும் இந்த பரிசோதனையை தொடர்ந்து மேற்கொண்ட பின்னர்தான் வேலைக்கு திரும்ப வேண்டும் என்று ஆசிய மற்றும் ஓசானியா மருத்துவ அமைப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆசியா மற்றும் ஓசானியா மருத்துவ அமைப்பு தலைவர் டாக்டர் கே.கே. அகர்வால் கூறுகையில், ''இந்த தொற்று ஏற்பட்டு இருக்கும்போது ஜிங்க், மினரல் மற்றும் விட்டமின் டி ஆகிய சத்து மருந்துகளை உட்கொள்ள வேண்டும். தொற்று ஏற்பட்ட ஐந்தாவது நாள்தான் மிகவும் முக்கியம். மூன்றாவது நாளில் நிமோனியா பரவ வாய்ப்பு இருக்கிறது. மூன்றாவது நாளில் நிமோனியாவுக்கான பரிசோதனை மேற்கொள்ளவில்லை என்றால் சிக்கல் ஏற்படும். சரியான நேரத்தில் மருத்துவமனையை அணுக வேண்டும், பரிசோதனைகளும் நடந்தால்தான் இறப்பு விகிதத்தை குறைக்க முடியும்.
மூக்கிற்கு வாசனை தெரியாதது, நாக்கிற்கு சுவை தெரியாதது ஆகிய இரண்டும் முக்கிய அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது. எனவே இந்த அறிகுறிகள் இருந்தாலே முதலில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.