ஏ டு இசட் எல்லாம் ஓகே.. இந்தியாவிற்கு ஏற்ற வேக்சின் இதுதான்.. அசர வைக்கும் கோவிட்ஷீல்ட்.. நம்பிக்கை!
டெல்லி: உலகம் முழுக்க பல்வேறு கொரோனா வேக்சின்கள் உருவாக்கப்பட்டாலும் இந்தியாவில் பயன்படுத்துவதற்கு ஏற்ற வேக்சின் எது என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்தியாவின் காலநிலைக்கும், மக்கள் தொகைக்கும் ஏற்ற வகையில் எந்த வேக்சின் சிறப்பானதாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கொரோனா வேக்சின் கண்டுபிடிப்பிற்கான ஆராய்ச்சிகள் தீவிரமாக நடந்து வருகிறது. உலகம் முழுக்க 120க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த கொரோனா வேக்சின் ஆராய்ச்சியில் ஈடுபட்டு உள்ளது.
அதில் 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இறுதிக்கட்ட ஆராய்ச்சியில் உள்ளது. ஃபைசர், மாடர்னா போன்ற நிறுவனங்கள் கொரோனா வேக்சின் சோதனையை முடித்து அனுமதிக்காக காத்து இருக்கிறது.
எப்படி
இந்த நிலையில் இந்தியாவில் பயன்படுத்த வசதியாக, ஏற்புடைய கொரோனா மருந்து எது என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியாவில் 120 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை உள்ளதால் எல்லோருக்கும் மருந்து கிடைக்க வேண்டும். இதற்கு மருந்து விலை குறைவாக இருக்க வேண்டும். எல்லோரும் வாங்கும்படி இருக்க வேண்டும்.
வெப்பநிலை
அதேபோல் இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு சீதோஷண நிலை நிலவும். இதனால் ஃபைசர் நிறுவனத்தின் மருந்துகளை -70 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையில் வைப்பது எல்லாம் மிகவும் கடினமான காரியம். மாடர்னா நிறுவனத்தின் வேக்சினை -40 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையில் வைப்பதும் கடினம். நாடு முழுக்க இவ்வளவு குறைந்த வெப்பநிலையில் மருந்தை பாதுகாப்பது மிக கடினம்.
எப்படி இருக்க வேண்டும்
இதனால் இந்தியாவில் மக்கள் பயன்படுத்த ஏற்ற கொரோனா வேக்சின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்டர்செனகா இணைந்து உருவாக்கி இருக்கும் கொரோனா வேக்சின்தான் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். முதல் கட்டமாக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழத்தின் கோவிட்ஷீல்ட் மருந்து தொடக்கத்தில் இருந்தே நம்பிக்கை அளித்து வருகிறது.
அவசரம் இல்லை
அவசரம் இன்றி முறையான விதிமுறைகளை பின்பற்றி சரியான வழி முறைகளுடன் இந்த மருந்து தயாரிக்கப்பட்டு வருகிறது. மாடர்னா, ஃபைசர் போன்ற நிறுவனத்தின் மருந்துகள் இந்தியாவில் சோதனை செய்யப்படவில்லை. ஆனால் கோவிட்ஷீல்ட் இந்தியாவிலும் முறையாக சோதனை செய்யப்பட்டது. இந்தியாவில் சீரம் நிறுவனம் மூலம் இந்த மருந்து தயாரிக்கப்பட்டு வருகிறது.
தயாரிப்பு
உலகில் அனைத்து இனக்குழுவிற்கும் ஏற்றபடி இந்த மருந்து தயாரிக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக இந்தியர்களின் உடல்நிலைக்கு இந்த மருந்து அதிகம் ஏற்றதாக இருக்கும் என்றும் கணிக்கப்படுகிறது.சண்டிகரில் இருக்கும் மத்திய அரசின் பிஜிஐ இயக்குனர் ஜகத் ராம் இது குறித்து கூறுகையில், நாங்கள் சோதனை செய்த வரையில் கோவிட்ஷீல்ட் மருந்து பெரிய அளவில் நம்பிக்கை அளிக்கிறது.
இந்தியா ஏற்றது
இந்தியாவிற்கு ஏற்ற வகையில் இந்த மருந்து உள்ளது. இதை எளிதாக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல முடியும். இதனை 2-8 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையில் வைத்தால் போதும்.இதனால் இந்த மருந்தை கிராமங்களுக்கும் மிக எளிதாக கொண்டு செல்ல முடியும். இந்தியாவிற்கு ஏற்ற மருந்து இதுதான் என்று அவர் கூறியுள்ளார்.
வசதி
குறைந்த பட்ச விலையாக 500-600 ரூபாயில் இந்த மருந்து கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கோவிட்ஷீல்ட் மருந்தை சீரம் நிறுவனம் ஏற்கனவே உற்பத்தி செய்ய தொடங்கிவிட்டது. இதில் 50% உற்பத்தி இந்தியாவிற்கு கிடைக்கும். இதன் காரணமாக இந்தியாவில் இந்த மருந்து விநியோகம் எளிமையாக நடக்க வாய்ப்புள்ளது.