நாடு முழுவதும் 1,91,181 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது - மத்திய சுகாதாரத்துறை
நாடு முழுவதும் இன்று 1,91,181 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
டெல்லி: நாடு முழுவதும் இன்று 1,91,181 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. ஆந்திராவில் அதிகபட்சமாக 16963 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்ட யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனாவுக்கு எதிரான உலகிலேயே மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கிவைத்தார். கோவிஷீல்ட், கோவாக்சின் என இரண்டு வகையான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள யாரும் வற்புறுத்தப்பட மாட்டார்கள் என்றும் தாமாக முன்வருபவர்களுக்குப் போடப்படும் எனவும் மத்திய அரசு கூறியிருந்தது. அதன்படி முதற்கட்டமாக கொரோனா தடுப்பில் முன்கள வீரர்களாச் செயல்படும் சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர் மனிஷ் குமார் என்பவர், இந்தியாவிலேயே முதன்முறையாக தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
டெல்லி ஜம்மு காஷ்மீர், ஒடிசா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டது. குஜராத், உத்தரப்பிரதேசம் , ஆந்திரா, உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநில முதல்வர்கள் தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கிவைத்தனர்.
கொரோனா தடுப்பூசி தமிழகத்தில் 2783 பேருக்கு செலுத்தப்பட்டது - தயக்கம் வேண்டாம் என்கிறார் அமைச்சர்
முதல்நாளான இன்றைய தினம் நாடு முழுவதும் முதல் நாளில் 1,91,181 முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக ஆந்திராவில் 16963 பேருக்கும் பீகாரில் 16,401 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. தமிழகத்தில் இன்று 2,783 பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். குஜராத்தில் 161 மையங்களில் மொத்தம் 11 ஆயிரத்து 800 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் 33 மாவட்டங்களில் மொத்தம் 12 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. ராணுவத்தில் பணியாற்றும் சுகாதாரத்துறையை சேர்ந்த 3000 பேர் இன்றைய தினம் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
இன்றைய தினம் தடுப்பூசி போட்டுக்கொண்ட யாருக்கும் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என்றும் அனைவரும் நலமாக இருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.