கொரோனா தடுப்பூசி.. இந்தியாவில் 600 பேருக்கு உடல்நல பாதிப்பு.. ஆனால் இதுதான் ரொம்ப கம்மி
டெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட 600 பேருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருந்தாலும், சர்வதேச அளவில் இது மிகக் குறைவு என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல்கட்டமாக நாடு முழுவதும் உள்ள சுகாதார ஊழியர்களுக்கும் முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிகளின் அவசரக்கால பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இரு தடுப்பூசிகளும் 21 நாட்கள் இடைவெளியில் இரண்டு டோஸ்களாக அளிக்கப்பட வேண்டும்.
உடல்நலக் குறைவு
இந்நிலையில், புதன்கிழமை மட்டும் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டதால் 10 பேருக்குப் பக்க விளைவுகள் சார்ந்த உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஏழு பேர் மருத்துவமனையிலிருந்து திரும்பிவிட்டதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் மொத்தம் 600 பேருக்குப் பக்க விளைவுகள் சார்ந்த உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. சர்வதேச அளவில் மற்ற நாடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள உடல்நல பாதிப்புகளுடன் ஒப்பிடுகையில் இதுதான் மிகக் குறைவு என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநில வரியான தகவல்
தலைநகர் டெல்லியில் தடுப்பூசி எடுத்துக்கொண்ட நான்கு பேருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அதில் ஒருவர் மட்டும் தற்போது ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளார். அதேபோல கர்நாடகாவிலும் உடல்நல பாதிப்பு ஏற்பட்ட இருவரில், ஒருவர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல உத்தரகண்ட், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களிலும் தடுப்பூசி எடுத்துக்கொண்ட ஒவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்தும் பணி
இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி ஐந்து நாட்கள் நிறைவடைந்துள்ளது. நேற்று மட்டும் சுமார் 14,119 பேருக்குப் புதிதாகத் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து நாட்களில் மட்டும் நாடு முழுவதும் 7,868,42 பேருக்குத் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசு அறிவித்துள்ளது.
உயிரிழப்பு
அதேபோல நாடு முழுவதும் இதுவரை தடுப்பூசி எடுத்துக் கொண்ட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் மூன்று பேரின் உயிரிழப்பிற்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று அரசு கூறியுள்ளது. ஒருவரது மரணம் தொடர்பான விசாரணை தற்போது நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 15,277 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.06 கோடியாக ஆக உயர்ந்துள்ளது. அதேபோல நேற்று மட்டும் 152 பேர் கொரோனாால் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா உயிரிழப்பு ஒரு லட்சத்து 52 ஆயிரத்தை தாண்டியுள்ளது.