'இப்படி' செய்தால் தடுப்பூசி பலன் பல மடங்கு அதிகரிக்கும்... அடித்து சொல்லும் சீரம் ஆராய்ச்சியாளர்
டெல்லி: கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாம் டோஸ்களுக்கு இடையேயான காலம் 28 நாட்களைவிட அதிகமாக இருந்தாலும் தடுப்பூசியின் பலன் அதிகமாக இருக்கும் என்று சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இன்று முதல் பொதுமக்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கவுள்ளது. முதல்கட்டமாகச் சுகாதார ஊழியர்களுக்கும் முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளின் அவசரக்கால பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
முதல் டோஸ் போட்டதும் சமூக விலகலை பராமரிக்காமல் இருந்துவிடாதீர்- பிரதமர் மோடி எச்சரிக்கை
கோவிஷீல்டு தடுப்பூசி
ஆக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய தடுப்பூசியை கோவிஷீல்டு என்ற பெயரில் புனேவைச் சேர்ந்த சீரம் நிறுவனம் உற்பத்தி செய்கிறது. இந்தத் தடுப்பூசியை 21 நாட்கள் இடைவெளியில் இரண்டு டோஸ்களாக அளிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
பலன் அதிகரிக்கும்
இந்நிலையில், இரண்டு டோஸ்களுக்கு இடையேயான காலத்தை அதிகரிக்கும்போது தடுப்பூசியின் பலனும் அதிகரிக்கும் என்று சீரம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுரேஷ் ஜாதவ் கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், "தடுப்பூசியின் இரண்டு டோஸ்கள் நான்கு வார இடைவெளியில் எடுத்துக்கொண்டால் 70 முதல் 80% வரை பலன் கிடைக்கிறது. அதேநேரம் இரண்டு தடுப்பூசி டோஸ்களுக்கு இடையேயான கால அளவு 6 முதல் 10 வாரங்களுக்குள் இருந்தால், இதன் பலன் மேலும் அதிகரிக்கிறது" என்றார்
மூன்றாம்கட்ட சோதனை
மூன்றாம்கட்ட சோதனையில் இரு டோஸ்களுக்கு இடைப்பட்ட காலம் நான்கு வாரங்களாக இருந்தது என்று குறிப்பிட்ட சுரேஷ் ஜாதவ், இரு டோஸ்களுக்கு இடைப்பட்ட காலம் நான்கு வாரங்களுக்குக் குறைவாக இருந்தாலும் தடுப்பூசியின் பலன் கிடைக்கும் என்றும் தடுப்பூசி டோஸ்களுக்கு இடைப்பட்ட காலம் அதிகமாக இருந்தால் பலனும் அதிகரிக்கும் என்றார். இதனால் தடுப்பூசி டோஸ்களுக்கு இடையேயான காலம் 6 முதல் 8 வாரங்களாக இருப்பது சரியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மிக்ஸ் செய்யக் கூடாது
தொடர்ந்து பேசிய அவர், "தடுப்பூசியின் முதல் டோஸே தடுப்பாற்றலை அளிக்கும் என்றாலும்கூட இரண்டாம் டோஸை எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொள்ள வேண்டும்" என்றார். கோவிஷீல்டு தடுப்பூசியும் கோவாக்சின் தடுப்பூசியும் முற்றிலும் வேறு வேறானவை என்று தெரிவித்த அவர், ஒருவர் எந்த தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக்கொள்கிறாரோ, அதே தடுப்பூசியின் இரண்டாவது டோஸை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தடுப்பூசி எடுத்துக்கொண்டாலும் பாதிப்பு ஏற்படும்
தடுப்பூசி எடுத்துக்கொண்ட பின் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுமா என்று கேள்விக்குப் பதிலளித்த அவர்,"தடுப்பூசிக்குப் பின்னரும் கொரோனா தொற்று ஏற்படும். இதுதவிர அனைத்து நோய்களும் ஏற்படும். ஆனால், கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படுமே தவிர நோய் பாதிப்பு ஏற்படாது. அதாவது மீண்டும் ஏற்படும் கொரோனா தொற்று தீவிரம் இல்லாமலேயே இருக்கும்" என்றார்