செல்போன் கதிர்வீச்சில் இருந்து காப்பாற்ற மாட்டுச் சாணம் சிப்... ராஷ்டிரிய காமதேனு ஆயோக் தகவல்!!
டெல்லி: மாட்டுச் சாணம் கதிர்வீச்சை குறைக்கும் மற்றும் எதிர்கொள்ளும் திறன் வாய்ந்தது என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று ராஷ்டிரிய காமதேனு ஆயோக் தலைவர் வல்லபாய் கத்திரியா தெரிவித்துள்ளார்.
#WATCH: Cow dung will protect everyone, it is anti-radiation... It's scientifically proven...This is a radiation chip that can be used in mobile phones to reduce radiation. It'll be safeguard against diseases: Rashtriya Kamdhenu Aayog Chairman Vallabhbhai Kathiria (12.10.2020) pic.twitter.com/bgr9WZPUxK
— ANI (@ANI) October 13, 2020
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அளித்திருந்த பேட்டியில், ''மாட்டுச் சாணம் ஒவ்வொருவரையும் காப்பாற்றும். வீட்டில் இந்த மாட்டுச் சாணத்தை வைத்தால், கதிர்வீச்சில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். (மேலும் மாட்டுச் சாணத்தால் செய்யப்பட்ட சிப் ஒன்றை காண்பித்து) செல்போனில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு மனிதரை தாக்காமல் இந்த மாட்டுச் சாணத்தால் செய்யப்பட்ட சிப் பாதுகாக்கும். இந்த சிப்பை செல்போன்களில் பயன்படுத்தலாம். இது நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும்'' என்றார்.
மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் வளர்ப்புத்துறையின் கீழ் ராஷ்டிரிய காமதேனு ஆயோக் வருகிறது. நாட்டில் கால்நடை எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக இந்த ஆயோக் உருவாக்கப்பட்டுள்ளது.
மாட்டுச் சாணத்தால் ஆன இந்த சிப்புக்கு ''கவ்சத்வ கவாச்'' என்று பெயரிடப்பட்டுள்ளது. கதிர்வீச்சினால் ஏற்படும் ஆபத்தில் இருந்து ஒருவர் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால் இந்த சிப்பை பயன்படுத்துங்கள் என்று கத்திரியா கேட்டுக் கொண்டுள்ளார். இந்த சிப்பை குஜராத்தில் இருக்கும் ஒரு பசு மாட்டுப் பண்ணை உருவாக்கியுள்ளது.
மேலும், சமீபத்தில் மாட்டு மூத்திரம் அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் கூறி இருந்தார். இதையும் மேற்கோள் காட்டி பேசி இருந்த கத்திரியா, அக்ஷய் குமார் மாட்டுச் சாணத்தையும் சாப்பிட்டு இருக்கிறார் என்றார்.