ஆமாம்.. திமுகவிடம் பணம் வாங்கினோம்... இந்திய கம்யூ.டி.ராஜா ஒப்புதல்
டெல்லி: மக்களவை தேர்தல் செலவுக்காக திமுகவிடம் நிதி பெற்றது உண்மை தான் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.
திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் வரவு செலவு கணக்குகள் தொடர்பான பிரமாணப்பத்திரத்தில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் ரூ.25 கோடி நிதி அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான தகவல் ஊடகங்களில் கசிந்ததை அடுத்து, கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது பலரும் விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கினர்.
பாஜகவுக்கு 144... சிவசேனாவுக்கு 126... உத்தவிடம் இறங்கி வந்த அமித்ஷா
மழுப்பல்
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் இது தொடர்பாக கடந்த 2 நாட்களுக்கு முன் விடுத்த அறிக்கையில், திமுகவிடம் பணம் பெற்றது தொடர்பாக தெளிவான விளக்கத்தை அளிக்காமல், மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்ற தலைப்பில் பொதுவான பதிலை தந்திருந்தார்.
ஒப்புதல்
இதனிடையே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர்கள் இது தொடர்பாக சரமாரி கேள்விகள் எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், திமுகவிடம் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் நிதி பெற்றது உண்மை தான் என்றும், அது வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற்றதாகவும் கூறினார்.
டி.ராஜா விளக்கம்
நிதி பெற்றது கூட்டணி ஒப்பந்தத்தின் ஒரு பகுதி தான் என்றும், எந்த விதிமீறலும் இல்லை எனவும் அவர் விளக்கம் அளித்தார். தேர்தல் கணக்கு தொடர்பான பிரமாணப்பத்திரத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இன்னும் தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்கவில்லை என்றும், அப்போது இதில் தெளிவான விடை கிடைக்கும் எனக் கூறினார்.
தைரியம்
திமுகவிடம் நிதி பெற்ற விவகாரத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பூசி மழுப்பும் வகையில் அறிக்கை விட்ட நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் அதனை தைரியமாக ஒப்புக்கொண்டு விளக்கம் அளித்துள்ளது.