ஆளுகிற அதிகாரம்தான் உங்களுக்கு.. நாட்டை பிளக்கிற அதிகாரம் இல்லை.. லோக்சபாவை அதிர வைத்த வெங்கடேசன்
Recommended Video
டெல்லி: "ஆளுகிற அதிகாரத்தைத்தான் மக்கள் உங்களுக்கு வழங்கியிருக்கிறார்களே தவிர இந்தியாவை பிளக்கிற அதிகாரத்தை, வெறுப்பின்பால் இந்தியாவை மோசமான நிலைக்கு செலுத்துகிற அதிகாரத்தை உங்களுக்கு வழங்கவில்லை" என்று குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரை எம்பி சு.வெங்கடேசன் காரசார விவாதத்தை எடுத்து வைத்தார்.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது. இந்தச் சட்ட திருத்த மசோதா தொடர்பான விவாதமும் நடந்தது.
இதில், மதுரை எம்பி சு.வெங்கடேசன் கலந்து கொண்டு உரையாற்றினார். "இந்திய வரலாற்றில் இன்று மிகக்கொடிய நாள்'' என்று தனது பேச்சை வெங்கடேசன் ஆரம்பித்து, இந்த சட்ட திருத்தத்துக்கான தங்களது எதிர்ப்பை மிக ஆழமாக பதிவு செய்தார் வெங்கடேசன்... அப்போது அவர் பேசியதன் சுருக்கம் இதுதான்:
நாத்திகர்கள்
"மலாலா ஏன் துரத்தப்பட்டார் என்பதை உலகம் அறியும். வன்முறைக்கு மதம் மட்டுமே அளவுகோல் கிடையாது.. மதத்தின் அடிப்படையில் எந்த முடிவும் எடுக்கவும் இயலாது. எந்த மதத்தையும் பின்பற்றாத கடவுள் நம்பிக்கை அல்லாத நாத்திகர்களை பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதை நான் கேட்க விரும்புகிறேன். மியான்மரை பற்றி இலங்கையை பற்றி நீங்கள் ஏன் பேச மறுக்கிறீர்கள்?
முஸ்லீம்கள்
இந்த சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானது, தமிழர்களுக்கு எதிரானது. இந்த சட்டத்திருத்தம் அண்டை நாடுகளில் உள்ள அனைத்து இந்துக்களுக்கும் வெளிப்படையாக அழைப்பு கொடுக்கிறது. அதே நேரம் உள்நாட்டில் உள்ள முஸ்லிம்களுக்கு நேரடியான அச்சுறுத்தலையும் அவமானத்தையும் தருகிறது என்பதை இந்த அவையில் பதிவு செய்கிறோம். நாட்டில் உள்ள எத்தனையோ பிரச்னைகளை தீர்வு காண்பதற்கு பதிலாக, இப்படி எண்ணற்ற புதிய பிரச்னைகளை உருவாக்குகிற சட்டமாக இந்த சட்டம் இருக்கிறது.
அர்த்தம்
இந்த நாடாளுமன்றத்தின் முகப்பில் சமஸ்கிருதத்தில் ஒரு வாக்கியம் எழுதப்பட்டுள்ளது.. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அத்தனை பேரும், தினமும் அந்த வாக்கியத்தை கடந்துதான் உள்ளே நுழைகிறோம்... அந்த வாக்கியத்தின் அர்த்தம் என்ன தெரியுமா?
வாக்கியம்
இந்தியா என்பது மத ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகியிருக்கும் யாராக இருந்தாலும் அவர்கள் யூதர்களாக இருந்தாலும், ஏமனை சேர்ந்தவர்களாக இருந்தாலும், பார்சிகளாக இருந்தாலும், ஆப்கானிஸ்தானத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், திபெத்தியர்களாக இருந்தாலும், வங்கதேசத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் அனைவரும் இதை தங்கள் இல்லமாகக் கருதலாம் என்று அந்த வாக்கியம் சொல்லுகிறது.
அதிகாரம்
இந்த சட்டத்திருத்தம் நிறைவேறினால் அவர்கள் இந்தியாவை இல்லமாக ஒருபோதும் கருதமாட்டார்கள். இங்கே உள்துறை அமைச்சர் சொன்னார், அடுத்த நான்கரை ஆண்டுகளுக்கு ஆளுகிற அதிகாரத்தை மக்கள் எங்களுக்கு வழங்கி இருக்கிறார்கள் என்று சொன்னார்.
பிளக்கிற அதிகாரம்
உண்மை... ஆளுகிற அதிகாரத்தைத்தான் மக்கள் உங்களுக்கு வழங்கியிருக்கிறார்களே தவிர இந்தியாவை பிளக்கிற அதிகாரத்தை, வெறுப்பின்பால் இந்தியாவை மோசமான நிலைக்கு செலுத்துகிற அதிகாரத்தை உங்களுக்கு வழங்கவில்லை என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.