மூன்று ''என்'' களுக்கு இடையில் நடக்கும் மோதல்.. பாஜக கூட்டணியில் குழப்பம்.. பின்னணி என்ன?
லோக்சபா தேர்தலுக்கு பின் பாஜக கட்சிக்குள்ளும், கூட்டணிக்குள்ளும் நிறைய மாற்றங்கள் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video
டெல்லி: லோக்சபா தேர்தல் முடிவிற்கு பின் பாஜக கட்சிக்குள்ளும், கூட்டணிக்குள்ளும் நிறைய மாற்றங்கள் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லோக்சபா தேர்தல் ஒருவழியாக நடந்து முடிந்துவிட்டது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் எல்லாம் பாஜகவிற்கு ஆதரவாக வந்து இருக்கிறது. இதனால் எதிர்க்கட்சிகள் மனமுடைந்து போய் உள்ளது.
ஆனால் இந்த கருத்து கணிப்புகள் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை இன்னும் சிதைக்கவில்லை. அதே சமயம் பாஜகவில் இதனால் பெரிய குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.
பாஜகவில் என்ன குழப்பம்
பாஜகவில் தற்போது யார் பிரதமர் பதவி ஏற்பது என்ற குழப்பம்தான் பெரிய பிரச்சனையாக உள்ளது. பாஜக தொண்டர்களிடம் கேட்டால், எல்லோரும் கண்டிப்பாக மோடிதான் தங்களுக்கு பிரதமர் ஆக வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் பாஜகவின் மேலிடம் வேறு விதமான திட்டங்களை வைத்து இருப்பதாக கூறுகிறார்கள்.
மூன்று பேர்
பாஜக தற்போது மூன்று பேரை பிரதமர் பதவிக்காக மனதில் வைத்து இருக்கிறது. ஒருவர் நரேந்திர மோடி, இன்னொருவர் நிதின் கட்கரி, இன்னொருவர் நிதிஷ் குமார். ஆம் ''என்'' எழுத்தில் தொடங்கும் இந்த மூன்று பேரில் ஒருவர்தான் பாஜக கூட்டணி சார்பாக பிரதமராக வாய்ப்பு உள்ளது என்று கூறுகிறார்கள். இவர்கள் மூவருக்கும் தற்போது கடும் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
நரேந்திர மோடி
நரேந்திர மோடிதான் இந்த தேர்தலில் பாஜகவின் முகமாக இருந்தது. அதனால் இவரை பிரதமராக்க பாஜக பெரிய அளவில் முயலும் என்று கூறுகிறார்கள். அதேபோல் இவருக்கு, பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவின் ஆதரவும் இருக்கிறது. இதனால் நரேந்திர மோடிதான் இந்த ரேஸில் முன்னிலையில் இருக்கிறார்.
நிதின் கட்கரி
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பல நாட்களாக பிரதமர் பதவிக்கு பிளான் செய்து வருகிறார். இவருக்கு ஆர்எஸ்எஸ் தரப்பு பெரிய அளவில் ஆதரவு அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நிதின் கட்கரி நரேந்திர மோடியை ஓவர்டேக் செய்து பிரதமராக திட்டம் போடலாம் என்று கூறுகிறார்கள். இவர் பாஜக தலைவர் பதவிக்கும் அடிபோட்டு வருகிறார்.
நிதிஷ் குமார்
ஆனால் இவர்கள் இருவருக்கும் தற்போது பெரிய தலைவலியாக மாறி இருப்பவர்தான் பீகார் முதல்வர் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார். நிதிஷ் குமாருக்கு பின் பெரிய கூட்டணி கட்சிகளின் கூட்டமே இருக்கிறது. இவர்கள் ஆதரவு அளித்தால் மட்டுமே பாஜக ஆட்சி அமைக்க முடியும். ஆனால் இவர்கள் எல்லோரும் நிதிஷ் குமாருக்கு நெருக்கமாக இருப்பதால், நிதிஷ் சொல்வதே தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கியத்துவம் பெறும் என்று கூறுகிறார்கள்.
இவர்களுக்கு இடையில் போட்டி
ஒரு பக்கம் நரேந்திர மோடி அமித் ஷாவை வைத்து மீண்டும் பிரதமராக முயல்கிறார். இன்னொரு பக்கம் நிதின் கட்கரி ஆர்எஸ்எஸ் அமைப்பை வைத்து பிரதமராக முயல்கிறார். இது எல்லாம் போக நிதிஷ் குமார் கூட்டணி கட்சிகளை வைத்து பாஜகவை நெருக்கி வருகிறார். இதனால் பாஜக கூட்டணிக்குள் வெளியில் தெரியாத ஒரு பனிப்போர் நிகழ்ந்து வருகிறது.