ஸ்டெனோவுக்கு கொரோனா- டெல்லி சி.ஆர்.பி. எப் தலைமையகம் மூடல்
டெல்லி: டெல்லி சி.ஆர்.பி.எப். தலைமையகத்தில் ஸ்டெனோ ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சி.ஆர்.பி.எப். தலைமையகம் மூடப்பட்டுள்ளது.
பல இடங்களில் பாதுகாப்புப் படையினருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் டெல்லியில் சி.ஆர்.பி.எப். தலைமையகத்தில் பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சி.ஆர்.பி.எப் கூடுதல் இயக்குநர் ஜெனரல் ஜாவேத் அக்தரிடம் ஸ்டெனோவாக பணிபுரிந்தவருக்குதான் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து டெல்லி லோதி சாலையில் உள்ள சி.ஆர்.பி.எப். தலைமையகம் மூடப்பட்டுள்ளது.
மேலும் சி.ஆர்.பி.எப் கூடுதல் இயக்குநர் ஜெனரல் ஜாவேத் அக்தர் உட்பட 10 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அனைத்து பரிசோதனைகளும் முடிவடையும் வரையில் தலைமையகம் மூடப்பட்டு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சி.ஆர்.பி.எப். ஓட்டுநர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மொத்தம் 144 சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் 133 பேர், டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள 31-வது பட்டாலியனைச் சேர்ந்தவர்கள். இதனையடுத்து ஒட்டு மொத்த பட்டாலியன் பகுதியும் சீல் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழந்திருப்பதும் குறிப்பிடத்தகுந்தது.