பப்ஜி மோகத்தில் சிக்கிய சிஆர்பிஎஃப் வீரர்கள்.. விளையாட அதிரடி தடை.. உயரதிகாரிகள் கண்காணிக்க உத்தரவு
டெல்லி: மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பப்ஜி என்ற மிக பிரபலமான ஆன்லைன் விளையாட்டை விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமீப காலமாக சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை அதிகம் அடிமையாகி விளையாட கூடிய ஆன்லைன் கேம் ஒன்று உண்டு என்றால் அது பப்ஜி தான். ஸ்மார்ட் போனை வைத்து சதா சர்வகாலமும் இதை விளையாடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. எனவே பப்ஜியை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் அவ்வபோது நடு முழுவதும் எழுந்து வருகிறது
சமீபத்தில் நேபாளத்தில் பப்ஜி விளையாட தடை விதிக்கப்பட்டது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள பல பள்ளிகள், மற்றும் கல்லூரிகளில் இந்த விளையாட்டிற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் சிஆர்பிஎஃப் எனப்படும் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் தங்களது ஸ்மார்ட் போன்களில் பப்ஜி கேமை விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் மீதான மோகம் காரணமாக தொடர்ந்து விளையாடியதால், ஏராளமான படை வீரர்களின் செயல்திறன் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விளையாட்டை தொடர்ந்து விளையாடியதன் மூலம், சக வீரர்களுடன் பேசி மகிழ்வது குறைந்து எப்போதும் போனிலேயே அதிக நேரம் செலவிடுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த விளையாட்டை தொடர்ந்து விளையாடியதால் பல வீரர்கள் தூக்கமின்மையால் அவதிப்பட்டு, அவர்களின் உடல் மற்றும் மனநலன்கள் பாதிக்கப்படுவதாகவும் ராணுவ வட்டாரங்கள் விளக்கமளித்துள்ளன.
மேலும் வீரர்கள் பப்ஜி விளையாடுவதைத் தடுக்க அவர்களை உயர் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வீரர்கள் தங்களது ஸ்மார்ட் போன்களிலிருந்து பப்ஜியை நீக்கிவிட்டார்களா என்பதை உறுதிபடுத்த வேண்டும் எனவும் உயரதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பப்ஜி விளையாட கூடாது என்ற உத்தரவை மீறும் வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.