எஸ்பிஜி வாபஸ்.. சோனியா, ராகுலுக்கு என்ன மாதிரியான பாதுகாப்பு?.. மாநிலங்களுக்கு சிஆர்பிஎஃப் கடிதம்
டெல்லி: சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்திக்கான சிறப்பு பாதுகாப்பு குழு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து அவர்களுக்கான புதிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் சிஆர்பிஎஃப் கடிதம் எழுதியுள்ளது.
உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள சிஆர்பிஎஃப், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, வயநாடு எம்பி ராகுல் காந்தி, பிரியங்கா வதேரா ஆகியோருக்கு ஆயுதம் ஏந்திய சிறப்பு கமாண்டோவுடன் கூடிய பாதுகாப்பை வழங்கி வந்தது.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு 1985-ஆம் ஆண்டு எஸ்பிஜி உருவாக்கப்பட்டது. எஸ்பிஜி சட்டம் 1988-இன் படி இவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் இந்த பாதுகாப்பை ராஜீவ் காந்தி படுகொலைக்கு பிறகு கடந்த 1991- முதல் வழங்கிவந்தது.
உள்துறை அமைச்சகம்
சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கின்றனவா என்பது குறித்து அனைத்து புலனாய்வு அமைப்புகளும் ஆய்வு செய்தனர். இதையடுத்து அது போன்ற அச்சுறுத்தல் ஏதும் இல்லை என உள்துறை அமைச்சகத்தில் அறிக்கையாக சமர்ப்பித்தனர்.
யூனியன் பிரதேசம்
இதையடுத்து இந்த நிலையில் சிறப்பு பாதுகாப்பு குழு பாதுகாப்பானது கடந்த 8-ஆம் தேதி முதல் விலக்கிக் கொள்ளப்பட்டது. அதற்கு பதிலாக இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்த புதிய பாதுகாப்பு நடைமுறை குறித்து அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு சிஆர்பிஎஃப் கடிதம் எழுதியுள்ளது.
புல்லட் புரூப்
சோனியா, ராகுல் , பிரியங்கா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கு பாதுகாப்பு வழங்க மேலும் ஒரு பட்டாலியனை அதிகரிக்கக் கோரி உள்துறை அமைச்சகத்திடம் சிஆர்பிஎஃப் கேட்கும் என தெரிகிறது. அதே போல் நவீன புல்லட் புரூப் கொண்ட வாகனங்களை கொள்முதல் செய்யவும் கோரிக்கை வைக்கும் என தெரிகிறது.
இசட் பிளஸ் பாதுகாப்பு என்றால் என்ன?
இசட் பிளஸ் பாதுகாப்பு என்பது மேற்கண்டவர்களை சுற்றி 100 சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். கடந்த ஆகஸ்ட் மாதம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அவரது மனைவி குருசரண் கவுர் ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்பிஜி பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.