குஜராத், தமிழகத்தில் ஒரே அளவில் தொற்று பாதிப்பு... உயிரிழப்பில் மட்டும் ஏகப்பட்ட வித்தியாசம்
டெல்லி: கொரோனா வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 95698 ஆக உள்ளது. இதில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இதில் இரண்டாம் இடத்தில் உள்ள குஜராத்திலும், மூன்றாவது இடத்தில் உள்ள தமிழகத்திலும் கிட்டத்தட்ட ஒரே அளவிலேயே பாதிப்பு உள்ளது. ஆனால் உயிரிழப்பு ஒப்பிடும் போது தமிழகத்தை விட குஜராத்தில் பன் மடங்கு அதிகம் ஆகும்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று முதல்முதலாக ஜனவரி இறுதியில் கேரளாவில் மூன்று பேருக்கு ஏற்பட்டது. அதில் இருந்து இந்தியா மீண்டது. அதன்பிறகு மார்ச் மாதத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக நாடு முழுவதும் மார்ச் 24ம் தேதி லாக்டவுன் அறிவிக்கப்பட்டது.
கொரோனாவில் இருந்து வேகமாக மீண்டு வரும் ஸ்பெயின், இத்தாலி.. இந்தியாவை விட குறைவான பாதிப்பு
மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடந்தனர். இதனால் கொரோனா பரவும் வேகம் கட்டுப்படுத்தப்பட்டது. எனினும் மகாராஷ்டிரா, குஜராத், தமிழகம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
இதுவரை 3,025 பேர் பலி
மே 18ம் தேதி காலை நிலவரப்படி இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 95,698 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் தொற்று பாதிப்புடன் 55,872 சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொற்று பாதிப்புடன் 36,795 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா தொற்றால் 3,025 பேர் உயிரிழந்துள்ளனர்.
33,053 பேர் பாதிப்பு
நாட்டிலேயே அதிகபட்சமாக மாகாராஷ்டிராவில் 33,053 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 24,167 பேர் தொற்றுடன் மருத்துவமனையில் உள்ளனர். 7,688 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். 1,198 பேர் கொரோனாவால் மகாராஷ்டிராவில் உயிரிழந்துள்ளனர்.
659 பேர் உயிரிழப்பு
குஜராத்தில் 11,380 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர் இதில் தொற்று பாதிப்புடன் 6222 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 4,499 பேர் சிகிச்சைக்கு பின் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 659 பேர் உயிரிழந்துள்ளனர்.
79 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் 11,224 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர் இதில் தொற்று பாதிப்புடன் 6973 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 4,172 பேர் சிகிச்சைக்கு பின் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 79 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் குறைவு
கொரோனா தொற்றால் தமிழகமும் குஜராத்தும் கிட்டத்தட்ட ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குஜராத்தில் தான் உயிரிழப்பு 659 என்று மிக கடுமையாக உயர்ந்துள்ளது. அதேநேரம் தமிழகத்தில் மிக குறைந்த அளவிலேயே உள்ளது. வெறும் 79 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மொத்த பாதிப்பில் .70 சதவீதம் ஆகும். அதேநேரம் குஜராத்தில் மொத்த பாதிப்பில் 5.79 சதவீதமாக உள்ளது.