சிபிஐ இயக்குனரின் கட்டாய விடுப்பு சரியா? தவறா? இன்று கூடுகிறது தேர்வு கமிட்டி!
சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவின் கட்டாய விடுப்பு குறித்து முடிவெடுக்கும் தேர்வு கமிட்டியின் கூட்டம் இன்று மாலை நடக்க உள்ளது.
சென்னை: சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவின் கட்டாய விடுப்பு குறித்து முடிவெடுக்கும் தேர்வு கமிட்டியின் கூட்டம் இன்று மாலை நடக்க உள்ளது.
சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியது சரியா, தவறா என்பது குறித்து தெரிந்து கொள்ள இன்னும் ஒரு வாரம் காத்திருக்க வேண்டும். சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியது தவறு என்று உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.
ஆனாலும் உச்ச நீதிமன்றம் இதில் ஒரு நிபந்தனையும் விதித்து இருக்கிறது. சிபிஐ அதிகாரிகளை தேர்வு செய்யும் அமைப்பான விஜிலென்ஸ் அமைப்புதான், சிபிஐ இயக்குனரின் கட்டாய விடுப்பில் முடிவு எடுத்திருக்க வேண்டும். அதனால் அலோக் வெர்மா விடுமுறை குறித்து சிவிசி முடிவு செய்யலாம் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
சிவிசி முடிவு
இதில் சிவிசி முடிவு செய்யம் வரை சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா இப்போது எந்த விதமான முக்கிய முடிவுகளும் எடுக்க கூடாது. மூன்று பேர் கொண்ட உயர் தேர்வு கமிட்டி குழு இந்த கட்டாய விடுப்பு குறித்து ஒரு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
கமிட்டி உருவானது
இந்த கமிட்டி தற்போது உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த கமிட்டியின் உறுப்பினராக பிரதமர் மோடி, காங்கிரஸ் லோக் சபா தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே ஆகியோர் செயல்படுவார்கள். இதில் மூன்றாவது உறுப்பினராக உச்ச நீதிமன்றம் நீதிபதி ஏ.கே சிக்ரி உறுப்பினராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தனக்கு பதிலாக நீதிபதி ஏ.கே சிக்ரியை உறுப்பினராக நியமித்துள்ளார்.
நேற்று இரவு
இந்த நிலையில் இந்த கமிட்டியின் மீட்டிங் இன்று மாலை நடக்க உள்ளது. நேற்றே இந்த மீட்டிங் இரவு நடைபெற்றது. அதில் உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே சிக்ரி, பிரதமர் மோடி, காங்கிரஸ் லோக் சபா தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே ஆகியோர் ஆலோசனை செய்தனர்.
மல்லிகார்ஜுனா கார்கே பேசினார்
இதில் என்ன விஷயங்கள் பேசினார்கள் என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை. அலோக் வெர்மாவின் கட்டாய விடுப்பிற்கு எதிராக மல்லிகார்ஜுனா கார்கே பேசினார் என்று தகவல்கள் வருகிறது. மேலும் அலோக் வெர்மா பணி செய்ய முடியாமல் இருந்த நாட்களை பூர்த்தி செய்யுங்கள் வகையில் அவருக்கு 70 நாட்கள் பணி நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.
இன்று மீண்டும்
பிரதமர் மோடி, சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவின் கட்டாய விடுப்பிற்கு ஆதரவாக பேசினார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் நீதிபதி சிக்ரி என்ன பேசினார் என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. இன்று மாலை இந்த குழுவின் அடுத்த சந்திப்பு நடக்கிறது. இந்த வாரத்திற்குள் இவர்கள் அறிக்கை அளிக்க வேண்டும் என்பதால், இன்று மாலை நடக்கும் மீட்டிங் முக்கியத்துவம் பெறுகிறது.