'முதலில் தேர்தல்-ல ஜெயிப்போம்; தலைவர்-லாம் அப்புறம் தான்' - காங்கிரஸ் அதிரடி முடிவு
டெல்லி: பல தேர்தல் தோல்விகளுக்குப் பிறகு கட்சியின் தலைமை மற்றும் நிர்வாகம் குறித்த சில சங்கடமான கேள்விகளை காங்கிரஸ் தலைவர்கள் எழுப்பியுள்ளனர்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி சந்தித்த படுதோல்வியின் எதிரொலியாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றுக் கொண்டார். எனினும், கட்சி ஒரு நிரந்தர தலைவர் தலைமையில் செயல்பட வேண்டும், முழுநேர தலைவரை தேர்வு செய்ய வேண்டும், உட்கட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று குலாம்நபி ஆசாத், கபில் சிபல் உள்பட 23 மூத்த தலைவர்கள் கடந்த ஆகஸ்டு மாதம் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர்.
தொடர்ந்து, உட்கட்சி தேர்தலும், கட்சி தலைவர் தேர்தலும் நடத்துமாறு சோனியா காந்தி, நிர்வாகிகளை கேட்டுக்கொண்டார். மதுசூதன் மிஸ்திரி தலைமையிலான காங்கிரசின் தேர்தல் பிரிவு, புதிய தலைவர் நியமனம் குறித்து சமீபத்தில் தனது சிபாரிசுகளை அளித்தது.
இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டியின் கூட்டம் இன்று நடைபெற்றது. காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு சோனியா காந்தி தலைமை தாங்கினார். கூட்டத்தில், கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடைபெற்றது.
அதில், மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, முகுல் வாஸ்னிக் மற்றும் பி.சிதம்பரம் ஆகியோர் உடனடியாக உட்கட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என கேட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், பல தேர்தல் தோல்விகளுக்குப் பிறகு கட்சியின் தலைமை மற்றும் நிர்வாகம் குறித்த சில சங்கடமான கேள்விகளையும் இவர்கள் எழுப்பியதாக தெரிகிறது.
அசோக் கெஹ்லோட், அமரீந்தர் சிங், ஏ.கே. ஆண்டனி, தாரிக் அன்வர் மற்றும் உம்மன் சாண்டி ஆகியோர் காங்கிரஸ் தலைவர் தேர்தலை மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்குப் பின்னர் நடத்த வேண்டும் என்று கூறியிருக்கின்றனர் .
அப்போது ஒரு தலைவர், "நாம் யாருடைய அஜெண்டாவை நோக்கி செயல்படுகிறோம்? நம்மைப் போன்று உட்கட்சித் தேர்தல்களைப் பற்றி பாஜக பேசுகிறார்களா? நாம் முதலில் மாநிலத் தேர்தலில் களம் காண வேண்டும். பிறகு, உட்கட்சி தேர்தலை நடத்தலாம் என்று அனல்பறக்க கூறியிருக்கிறார்.
இறுதியாக, இரண்டாவது குழு முன்வைத்த கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டது. எனினும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இறுதி முடிவை எடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி, வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்களுக்கு நன்றி கூறியும், தடுப்பூசி போடுவதற்கு மக்கள் முன்வர வேண்டும் என்றும், வாட்ஸ் அப் தரவு கசிந்தது தொடர்பாக கூட்டு நாடாளுமன்றக் குழு விசாரணை நடத்த வேண்டுமென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.